Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 19–ந் தேதி தாக்கல் மேயர் சைதை துரைசாமி புதிய திட்டங்களை அறிவிக்கிறார்

Print PDF

தினத்தந்தி           17.02.2014

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 19–ந் தேதி தாக்கல் மேயர் சைதை துரைசாமி புதிய திட்டங்களை அறிவிக்கிறார்

சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 19–ந் தேதி(புதன்கிழமை) மேயர் சைதை துரைசாமி தாக்கல் செய்கிறார். இதில் சென்னை மாநகராட்சிக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

பட்ஜெட் தாக்கல்

சென்னை மாநாகராட்சி பட்ஜெட் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக கடந்த ஆண்டு மார்ச் 11–ந் தேதி, 200 வார்டுகளுக்கும், 3 ஆயிரத்து 630 கோடி ரூபாய் மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் கல்வி, சுகாதாரம், சாலை மேம்பாடு உள்பட 126 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் புதிதாக சாலைகளும்அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான விசேஷ கூட்டம் வருகிற 19–ந் தேதி சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் இந்த ஆண்டுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

அன்றைய தினமே விவாதம்

இந்த பட்ஜெட் கூட்டம் காலை சரியாக 9.30 மணிக்கு மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர், துணை மேயர் பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த ஆண்டு பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. குறிப்பாக கல்வி, சுகாதாரத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. மேலும் விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

அன்றைய தினம் மதியமே பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற இருக்கிறது. இந்த விவாதத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து மேயர் சைதை துரைசாமி பேசுவார்.

 

தெற்கு தில்லி மாநகராட்சி: முன்வரைவு பட்ஜெட் தாக்கல்

Print PDF

தினமணி              10.12.2013

தெற்கு தில்லி மாநகராட்சி: முன்வரைவு  பட்ஜெட் தாக்கல்

தெற்கு தில்லி மாநகராட்சியின் 2013-14-ஆம் ஆண்டுக்கான முன்வரை பட்ஜெட்டை மாநகராட்சி ஆணையர் மணீஷ் குப்தா திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

 தெற்கு தில்லி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முன்வரைவு பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியது: நிகழ் நிதியாண்டில் ரூ. 2,961 கோடி அளவுக்கு வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், கடந்த 11 மாதங்களில் ரூ. 2,982 கோடி வரி வசூலாகியுள்ளது. வரும் நிதியாண்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாது. வரும் நிதியாண்டில் மாநகராட்சிக்குத் தனி அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, துவாரகா பகுதியில் நிலம் ஒதுக்க தில்லி மேம்பாட்டு ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

 வரும் நிதியாண்டில் தெற்கு தில்லி மாநகராட்சி ஊழியர்களுக்காக கிரேட்டர் கைலாஷ், தில்லி கேட் - அம்பேத்நகர் விளையாட்டு அரங்கம் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள்   கட்டவும், ஏற்கெனவே கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள மாநகராட்சி ஊழியர் குடியிருப்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 தெற்கு தில்லி மாநகாட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள தெரு விளக்குப் பராமரிப்புப்  பணிகளுக்காக நவீன ஹைட்ராலிக் ஏணி இயந்திரத்தை வாங்கவும், கூடுதலான வாகன மையங்களை அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.  தெற்கு தில்லி மாநகாட்சியின் நான்கு மண்டலங்களிலும் பேரிடர் மேலாண்மை மையங்கள், அனைத்து வார்டுகளிலும் கழிவு சுத்திகரிப்பு ஆலை, மாநகராட்சியின் சார்பில் வாடகை சைக்கிள் நிலையங்கள் அமைக்கத் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 மேலும்,மாநகராட்சியில் உள்ள பூங்காக்களை மேம்படுத்தவும், கூடுதல் தோட்டப் பராமரிப்பாளர்களைப் பணியில் அமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 200 பூங்காக்களில் சேரும் இலைக் குப்பைகளைக் கொண்டு பசுமை மேலாண்மைத் திட்டத்தின் கீழ் உரங்களைத் தயாரித்து, குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி தொடக்கக் கல்வி மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் 19 சதவீத நிதி  ஒதுக்கப்படும். புதிதாக 19 பள்ளிகள் தொடங்கப்படும்.

புதிய வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் வாகன நிறுத்த வரியை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, ரூ. 1 லட்சம் வரை மதிப்புள்ள வாகனங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 4 ஆயிரத்தை ரூ. 8 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, ரூ. 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை மதிப்புள்ள வாகனங்களுக்கு ரூ. 8 ஆயிரமாகவும், ரூ. 10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மதிப்புள்ள வாகனங்களுக்கு ரூ. 15 ஆயிரமாகவும், ரூ. 20 லட்சத்துக்கும் அதிக மதிப்புள்ள வாகனங்களுக்கு ரூ. 30 ஆயிரமாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் ஆணையர் மணீஷ் குப்தா.

 

ரூ.3,630 கோடிக்கு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

Print PDF

தினமணி                 12.04.2013

ரூ.3,630 கோடிக்கு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
 
இந்த நிதியாண்டுக்கான (2013-14) சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிதியாண்டுக்கான (2013-14) சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிதியாண்டுக்கான (2013-14) சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

ரூ. 3 ஆயிரத்து 630 கோடிக்குத் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், சாலை மேம்பாடு உள்பட மாநகராட்சி வளர்ச்சிக்கான 126 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் புதிய திட்டங்களை மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.

இந்த நிதியாண்டின் மொத்த வரவு ரூ. 3 ஆயிரத்து 629.40 கோடியாகவும், செலவு ரூ.3 ஆயிரத்து 630.50 கோடியாகவும், பற்றாக்குறை ரூ.1.10 கோடியாகவும் இருக்கும் என்று நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்து 922 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.708 கோடி அதிக செலவினங்களுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்வி, பொது சுகாதாரம், குடும்ப நலம், சாலைகள், பாலங்கள், வருவாய், திடக்கழிவு மேலாண்மை, கட்டடம், மின்சாரம், இயந்திரப் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் புதிய திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

சொத்து வரி, தொழில் வரி உள்பட புதிய வரிவிதிப்புகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

வார்டு அலுவலகங்களில் சொத்து வரி: மாநகராட்சி சொத்துவரி தற்போது மண்டல அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் வசூலிக்கப்பட்டு வருகிறது. சொத்து வரி செலுத்தும் முறையை எளிமையாக்க வார்டு அலுவலகங்களில் வரி செலுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 200 வார்டு அலுவலகங்களில் கணினி வசதியுடன்கூடிய சொத்துவரி வசூல் மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ஜெனரேட்டர்: மாநகராட்சிப் பள்ளிகளில் மின்தடை காரணமாக கணினி வகுப்புகள், ஆய்வகங்கள், அலுவலகப் பணிகள் தடைபடாமலிருக்க சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஜெனரேட்டர் நிறுவப்பட உள்ளது.

சென்னையில் தற்போது 99 தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடையே அதற்கு கிடைத்த வரவேற்பைக் கருத்தில் கொண்டு மேலும் 20 தொடக்க பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறையில் ஒன்றாம் வகுப்பு தொடங்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொசுவை ஒழிக்க நொச்சி செடி வளர்ப்பு: கொசு மற்றும் பூச்சிகளைக் குறைக்கும் வகையில் வீடுகள்தோறும் நொச்சி செடி வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நொச்சி செடியில் உள்ள ரசாயன மூலப்பொருள்கள் மூலம் கொசு உள்பட தீங்கு விளைவிக்கும் அனைத்து புழு பூச்சிகளை ஒழிக்க முடியும் எனவும் இதற்காக வீடுகள் மற்றும் நீர்நிலை ஓரங்களில் அந்தச் செடியை வளர்ப்பதற்கான ஏற்பாட்டை மாநகராட்சி மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தா, ஆயுர்வேத மருந்தகங்கள்: இந்திய மருத்துவ முறைகளான சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்தகங்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் தொடங்கப்பட உள்ளன. ஏழை மக்கள் பயன் பெற வேண்டி 11 சித்தா மருந்தகங்கள், 14 ஆயுர்வேத மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ளதாக திட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக்கப்பட்ட பகுதிகளில் நல்வாழ்வு மையங்கள்: சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் 10 நல்வாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளன. மக்கள்தொகை அடிப்படையில் தேவையான இடங்களில் இந்த நல்வாழ்வு மையங்கள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரம் செயல்படும் மருத்துவமனைகளில் நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கருவிகளின் பாதுகாப்பு கருதி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 பூங்காக்கள்: மாநகராட்சி பகுதியில் உள்ள திறந்த வெளிநிலங்களில 100 பூங்காக்கள் புதிதாக அமைக்கப்படும். ஏற்கெனவே உள்ள பூங்காக்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

நூற்றாண்டு நிறைவு விழா அரங்கம்: சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டடத்தின் நூற்றாண்டு விழா (1913-2013) நிறைவைக் குறிக்கும் வகையில் புதிய பல்நோக்கு அரங்கம் கட்டப்படும்.

பள்ளிகளில் ஆங்கில ஆய்வகங்கள்: மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் வகையில் 15 நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆய்வகங்களில் ஆங்கில உச்சரிப்பு, பேச்சு, எழுதும் திறன் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். அதே போல போதிய இடவசதி உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்கப்படும்.

மழலையர் பள்ளிகளில் வண்ண சீருடை: சென்னை மழலையர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் வழங்கப்படுவதைப் போல வண்ண சீருடைகளும், குழந்தைகளைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட காலணிகளும் வழங்கப்படும். மக்களின் வரவேற்பையும், தேவையையும் கருத்தில் கொண்டு மாநகராட்சி பகுதியில் மேலும் 10 புதிய மழலையர் பள்ளிகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாய்கள் சரணாலயம்: தெருக்களில் நோய்களுடன் திரியும் நாய்களைப் பராமரிப்பதற்காக மண்டலம் தோறும் நாய்கள் சரணாலயம் அமைக்கப்படும். பொதுமக்களுக்கு தொல்லையளிக்கும் தெரு நாய்களை பிடித்து தடுப்பூசி போடப்படும். மேலும் நாய்களுக்கு இனக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து சரணாலயத்தில் பராமரிக்கப்படும்.

செல்லப் பிராணிகள் மயானம்: வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் இறந்தால் அவற்றை அடக்கம் செய்வதற்காக மண்டலம் தோறும் செல்லப் பிராணிகள் மயானம் அமைக்கப்படும். இங்கு பொதுமக்கள் தங்கள் செல்லப் பிராணிகளை இலவசமாக அடக்கம் செய்து கொள்ளலாம்.

மாநகராட்சி கட்டடங்களில் சூரிய சக்தி மின்சாரம்: மாநகராட்சி கட்டடங்களில் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சி அலுவலகங்களின் அனைத்துக் கட்டடங்களிலும் சூரிய சக்தி தகடுகள் மூன்றாண்டுகளுக்குள் அமைக்கப்படும்.

பிற முக்கிய அறிவிப்புகள்

மாநகராட்சிப் பள்ளிகளில் உபகரணங்களுடன் கூடிய ஆசிரியர் அறைகள்.

ஒவ்வொரு மண்டலத்திலும் தலா ஒரு பள்ளியில் நிரந்தர அறிவியல் கண்காட்சியகம்.

தகுதி வாய்ந்த 10 மாணவர்களுக்கு சர்வதேசத் தரத்தில் நீச்சல் பயிற்சி

விரிவாக்கப்பட்ட அம்பத்தூர் (மண்டலம் 7) கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள இறைச்சிக்கூடம் நவீனப்படுத்தி செயல்படுத்தப்படும்.

மேன்சன்கள், விடுதிகள், சேவை விடுதிகள் உள்ளிட்டவை மாநகராட்சி சட்டப்படி ஒழுங்குபடுத்தி உரிமம் வழங்கப்படும்.

மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் கட்டடங்களில் மண்டலத்துக்கு ஒன்று என புதிய 15 இரவு நேரக் காப்பகங்கள் தொடங்கப்படும்.

109 நலவாழ்வு மையங்களுக்கு இன்வெர்ட்டர் கருவிகள், டிஜிட்டல் வெப்பமானிகள் மற்றும் ரத்த அழுத்த கருவிகள் வழங்கப்படும்.

அனைத்து குப்பை வாகனங்களையும் சுத்தப்படுத்த தானியங்கி வாகனம் கழுவும் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்.

அனைத்து மண்டலங்களிலும் சுகாதாரமான முறையில் இயங்கும் மீன் அங்காடிகள் அமைக்கப்படும்.

விரிவாக்கப்பட்ட மண்டலங்களில் நவீன எரிவாயு எரியூட்டு மயானங்கள் அமைக்கப்படும்.

மகாத்மா காந்தி சாலையில் உள்ள லாரி நிலையத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும்.

அனைத்து இரவுநேர துப்புரவு பணியாளர்களுக்கும் ஒளிரும் மேலாடை வழங்கப்படும்.

இணையதளம் மூலம் வணிக வளாகக் கடை வாடகை செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.

மாநகராட்சி நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்படும்.

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் சொத்து வரி செலுத்தும் முறை.

இணையதளம் மூலம் சமூக நலக்கூடங்கள் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும்.

126 புதிய அறிவிப்புகள்; புதிய வரி இல்லை

துறை ஒதுக்கீடு

சாலைகள் மற்றும் பூங்கா ரூ. 990.49 கோடி

மழைநீர் வடிகால்வாய் ரூ. 450 கோடி

பாலங்கள் ரூ. 31.15 கோடி

மின்சாரம் ரூ. 66 கோடி

திடக்கழிவு மேலாண்மை ரூ. 58.70 கோடி

இயந்திரப் பொறியியல் ரூ. 14.10 கோடி

கட்டடம் ரூ. 74 கோடி

கல்வி ரூ.14.50 கோடி

சுகாதாரம் ரூ. 3.08 கோடி

குடும்ப நலம் ரூ. 3.30 கோடி

வருவாய் செலவீனங்கள் (எதிர்பார்ப்பு)

செலவீனம் செலவீனத் தொகை

பணியாளர் ஊதியம் ரூ. 711.36 கோடி

ஓய்வூதியம் ரூ. 22.4 கோடி

பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு ரூ. 283.97 கோடி

நிர்வாகச் செலவு ரூ. 88.34 கோடி

கடனுக்கான வட்டி செலுத்துதல் ரூ. 4.18 கோடி

 


Page 2 of 31