Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

தூத்துக்குடி ரூ.99¼ லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்– தார்சாலை பணிகள் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF
தினத்தந்தி         26.03.2013

தூத்துக்குடி ரூ.99¼ லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்– தார்சாலை பணிகள் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.99¼ லட்சம் செலவில் பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மற்றும் தார்சாலை பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று மாலை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் சசிகலாபுஷ்பா தலைமை தாங்கினார்.

துணை மேயர் சேவியர், ஆணையாளர் சோ.மதுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:–

நடவடிக்கை

வீரபாகு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து வாயு வெளியேறியதால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர்: மக்களை பாதிக்கும் வகையில் எந்த நிறுவனம் செயல்பட்டாலும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கும். மாநகராட்சியின் கீழ் என்னென்ன பணிகள் வரும் என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருப்பதால், அங்கு உள்ள இயந்திரங்கள் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் முறையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது காற்றில் வாயு கலந்து மாசு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தூத்துக்குடி மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் பட்சத்தில், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அகஸ்டின்: ஸ்டெர்லைட் நிறுவனம் மாநகராட்சி பகுதியில் இருப்பதால் தனியாக வல்லுநர் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். பாதிப்பு இருந்தால், ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர்: ஸ்டெர்லைட் நிறுவனத்தில் உண்மை நிலையை அறிய சிறப்பு நிபுணர் குழு அமைக்க நிர்வாகத்தினரை கேட்டுக் கொள்கிறேன்.

பெரியசாமி: மாநகராட்சி பகுதியில் பல்வேறு கட்டணம் வசூலிக்கும் உரிமம் தொடர்பாக ஏலம் விடுவதில் மாநகராட்சிக்கு இழப்பு வருமா?.

ஆணையாளர்: எந்த ஒரு ஏலமாக இருந்தாலும் அடிப்படைத் தொகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஏற்கனவே இதில் தணிக்கைக்குழு ஆட்சேபம் தெரிவித்தது. இதனால் தற்போது தணிக்கைக்குழு ஆட்சேபம் தெரிவிக்காத வகையில் அதிகபட்சமாக அடிப்படை தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தீர்மானங்கள்

கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.99 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்வதற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது மற்றும் தார்சாலைகள், சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி மேற்கொள்வது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பட்ஜெட்

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியின் 2013–14–ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2012–13–ம் ஆண்டில் வரவு, மற்றும் செலவினங்கள் இறுதி செய்யப்பட்டதில் ரூ.3 கோடியே 14 லட்சத்து 34 ஆயிரம் பற்றாக்குறை ஏற்பட்டது. 2013–14–ம் நடப்பு ஆண்டுக்கான வருவாய் நிதியில் ரூ.1 கோடியே 40 லட்சம் பற்றாக்குறை ஏற்படும் எனவும், குடிநீர் நிதியில் ரூ.4 கோடியே 41 லட்சத்து 25 ஆயிரம் உபரியாக வருமானம் வரும் எனவும், கல்வி நிதியில் ரூ.75 லட்சத்து 25 ஆயிரம் உபரியாக வருமானம் வரும் எனவும் உத்தேசமாக கணக்கிடப்பட்டு உள்ளது.
 

சென்னை குடிநீருக்காக ரூ.330 கோடியில் புதிய அணை அரசு நில வழிகாட்டி மதிப்பீட்டு உயர்வு நிறுத்திவைப்பு பட்ஜெட்டில் அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி                22.03.2013

சென்னை குடிநீருக்காக ரூ.330 கோடியில் புதிய அணை அரசு நில வழிகாட்டி மதிப்பீட்டு உயர்வு நிறுத்திவைப்பு பட்ஜெட்டில் அறிவிப்பு

அரசு நில வழிகாட்டி மதிப்பீட்டு உயர்வை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக ரூ.330 கோடியில் ஒரு புதிய அணை கட்டப்பட்டு வருகிறது என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்று விவரங்கள் வருமாறு:–

நில வழிகாட்டி மதிப்பீடு உயர்வு நிறுத்திவைப்பு

நில வழிகாட்டி மதிப்பீட்டு உயர்வை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை கிராமங்களின் அருகில் ரூ.330 கோடி செலவில் ஒரு புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

மேலும், சோழவரம், போரூர், நேமம், அயனம்பாக்கம் ஏரிகளின் கொள்திறனை உயர்த்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளுரோசிஸ் குறைப்பு திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

கூட்டுக்குடிநீர் திட்டம்

மதுரை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், வேலூர், சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.212.54 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஓரளவு குடிநீர் வசதி கிடைத்துள்ள 6 ஆயிரம் ஊரக குடியிருப்புகளுக்கும், குடிநீரின் தரம் பாதிக்கப்பட்டு உள்ள 195 குடியிருப்புகளுக்கும், தேசிய ஊரக குடிநீர் வழங்கல் திட்டம், அடிப்படை தேவைகள் திட்டம் மற்றும் மாநில அரசு நிதியின் கீழ் ரூ.1,190.72 கோடி செலவில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

மலைப்பகுதி ஐ.டி.ஐ. நிலையங்களுக்கு ரூ.50 கோடி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட பங்கு மூலதன உதவியாக ரூ.13.26 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் சிறப்பு உதவி மூலம், பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்திட இந்த நிறுவனத்திற்கு ரூ.122.48 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்குவதற்காக ரூ.56.34 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு சிறப்பு திட்டத்தை தொடங்கியுள்ளார். அதன்படி, நடப்பாண்டில் ஜமுனாமரத்தூர், கொல்லிமலை, ஆனைகட்டி, பச்சைமலை, கல்வராயன்மலை ஆகிய 5 இடங்களில் புதிய ஐ.டி.ஐ. நிலையங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

ரூ.1,130 கோடியில் சாலைகள் மேம்பாடு

2013–2014–ம் நிதியாண்டில் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் 8–வது கட்டத்தின் கீழ் 3095.77 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை ரூ.1,130.10 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இதில், ரூ.78.18 கோடி செலவில் 45 பாலங்களையும், ரூ.772.97 கோடி செலவில் 2031.22 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளையும் மேம்படுத்தும் பணிகளை கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளும், ரூ.278.95 கோடி செலவில் 1064.55 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத் துறையும் மேற்கொள்ளும்.

சென்னை பெருநகர் மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி

இந்த நிதியாண்டில் சென்னை பெருநகர மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.500 கோடியும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்திற்காக ரூ.750 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மறுசுழற்சி முறை, கழிவுகளை அகற்றும் வசதிகளோடு கூடிய திடக்கழிவு மேலாண்மை முறை அனைத்து கிராமங்களிலும் ஏற்படுத்தப்படும். நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராமங்கள், அந்த நகரங்களில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களில் பங்கு கொண்டு திடக்கழிவு மேலாண்மை முறையை செயல்படுத்தும்.

கழிவுகளை சேகரித்து கையாளும் செலவுகள் உள்ளிட்டு, இத்தகைய வசதிகளை ஏற்படுத்துவதற்காக நிதிப்பகிர்வுத் தொகையில் இருந்து ரூ.150 கோடி தனியாக ஒதுக்கப்படும். ‘தூய்மை பாரதம்’ திட்டத்தில் கிடைக்கக்கூடிய ரூ.97.85 கோடியும், திடக்கழிவு, கழிவுநீர் மேலாண்மை பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

 

மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் குறைகள் தீர்க்க சிறப்பு திட்டம் அறிமுகம் ரூ50 கோடியில் மேம்பாலங்கள் வண்டியூர் கண்மாயில் படகு சவாரி ரூ8 கோடியில் சுரங்க நடைபாதைகள்

Print PDF
தினகரன்         12.03.2013

மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் குறைகள் தீர்க்க சிறப்பு திட்டம் அறிமுகம் ரூ50 கோடியில் மேம்பாலங்கள் வண்டியூர் கண்மாயில் படகு சவாரி ரூ8 கோடியில் சுரங்க நடைபாதைகள்


மதுரை, : மாநகராட்சி பட்ஜட்டில் 100 வார்டிலும் குறைகளை தீர்க்க சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வண்டியூர் கண்மாயின் மத்தியில் தீவு அமைத்து படகு சவாரி, ரூ.50கோடியில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சியின் 2013-14ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மேயர் ராஜன் செல்லப்பா தாக்கல் செய்தார்.

அதிலுள்ள முக்கிய அம்சங்கள் மதுரை மாநகராட்சியில் 1500 புதிய ஊழியர் நியமனம் செய்து கொள்ள முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையம், ஆவின் நிறுவனம், மேலூர் சாலை, தெற்குவெளி வீதி, அண்ணா நகர், பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.50கோடியில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும். முதற்கட்டமாக 2மேம்பாலங்கள் கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது.

கோரிப்பாளையம், செயின்ட்மேரீஸ் பள்ளி சந்திப்பு, பெரியார் பஸ்ஸ்டாண்ட் மற்றும் வடக்குவெளி வீதி ஆகிய பகுதிகளில் ரூ.8 கோடியில் சுரங்க நடைபாதைகள் அமைக்கப்படும். ரிங்ரோட்டின் இருபுறமும் தடுப்பு சுவர் எழுப்பி 6 வழிச்சாலையாக்கப்படும்.

வண்டியூர் கண்மாயை அழகுபடுத்தி பறவைகள் சரணாலயம், பொழுது போக்கு பூங்கா அமைக்கவும், கண்மாயின் மத்தியில் தீவு ஏற்படுத்தி படகு சவாரியை மீண்டும் துவங்க ரூ.60 கோடியில் திட்டம் தயாரித்து அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அம்மா திட்டம் என்ற பெயரில் சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. அழகிய, தூய்மையான, சுகாதாரமான மாநகரமாக்கும் நோக்குடன் இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி 100 வார்டுகளிலும் அனைத்து குறைகளும் உடனடியாக தீர்க்கப்படும். இதற்காக மண்டலத்திற்கு 150 பேர் வீதம் 600 பணியாளர்கள் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு மண்டலத்திலும் 15 பேர் கொண்ட 10குழுக்கள் ஏற்படுத்தப்படும். இதுதவிர குடிநீர் மற்றும் கழிவு நீர் கசிவை கண்காணித்து சீரமைக்க நடமாடும் தனிக்குழு செயல்படும். இந்த திட்டத்திற்காக வார்டுக்கு ரூ.2லட்சம் வீதம் 100 வார்டுக்கு மாதம் ரூ.2 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கவுன்சிலர் வார்டு மேம்பாட்டுக்கான ரூ.5லட்சம் நிதி ரூ.10லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள மாநகராட்சி இடம் தொழில் முனைவோர் பூங்காவாக்கப்படும். வண்டியூர் கண்மாய் சார்ந்த பகுதியை சுற்றுலா மற்றும் மருத்துவ சுற்றுலா மையமாகவும் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

குடிநீர் பிரச்னை தீர்க்க அறிவிப்பு இல்லை

மேயர் ராஜன்செல்லப்பா பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கியதும், திமுக கவுன்சிலர்கள் எழுந்து, பட்ஜெட் விவரங்கள் மரபுபடி முன்கூட்டியே கவுன்சிலர்களுக்கு தரப்படவில்லை, என்றனர்.

உடனே மேயர், அப்படி மரபு இல்லை. பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பேச வாய்ப்பு தருகிறேன், அப்போது பேசுங்கள். மீறினால் நிரந்தரமாக வெளியேற்றும் நிலை ஏற்படும், என்றார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இதன் பிறகு திமுக எதிர்க்கட்சி தலைவர் எம்.எல்.ராஜ், முபாரக்மந்திரி, மாணிக்கம் கூறியதாவது: கடந்த ஆண்டு மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எந்த திட்டமும் நிறைவேறாமல் கானல் நீராகி விட்டது. அதையே மாற்றி இந்த பட்ஜெட்டில் மேம்பாலம், சுரங்கப்பாதை வருகிறது, வண்டியூர் கண்மாயை அழகுபடுத்தி படகு சவாரி என்று மீண்டும் அறிவித்து வெறும் கையில் மேயர் முழம் போடுகிறார். இந்த பட்ஜெட்டிலும் மக்களுக்கு பயன் தரக்கூடியது எதுவும் இல்லை.

மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் மக்கள் அடிப்படை தேவை நிறைவேறாமல் வேதனை அடைந்து வருகின்றனர். முக்கியமாக நகர் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்கி உள்ளது. அதை தீர்க்க பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் எப்போது குடிநீர் கிடைக்கும் என்றும் சொல்ல வில்லை. மாநகராட்சி அன்றாடம் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கு மேயர் புதிய பெயர் சூட்டி இருக்கிறார். மொத்தத்தில் கானல் நீர் பட்ஜெட். இவ்வாறு அவர்கள் கூறினர்.
 


Page 9 of 31