Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

ஈரோடு மாநகராட்சியில் ரூ. 161 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்: ரூ. 11.5 கோடி பற்றாக்குறை

Print PDF
தினமணி     28.03.2013

ஈரோடு மாநகராட்சியில் ரூ. 161 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்:  ரூ. 11.5 கோடி பற்றாக்குறை


ஈரோடு மாநகராட்சியில் ரூ. 160.95 கோடிக்கு பட்ஜெட்டை மேயர் ப.மல்லிகா பரமசிவம் தாக்கல் செய்தார். இதில் ரூ. 11.55 கோடி பற்றாக்குறை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2013-14ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டில் சொத்து வரி மூலம் ரூ. 17.03 கோடி வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட மாநகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூலமாகவும், அரசு ஊழியர்கள் மூலமாகவும் தொழில்வரியாக ரூ. 3.17 கோடி வருவாய் கிடைக்கும்.

மாநகராட்சிக்குச் சொந்தமான காமராஜ் சாலை வணிக வளாகக் கடைகள், பேருந்து நிலையத்தில் உள்ள புதிய, பழைய வணிக வளாகம் மற்றும் மேற்குப்புற கடைகள், விசிடிவி சாலை, ஆர்.கே.வி. சாலை, ஹெமிங்வே வணிக வளாகக் கடைகள், காவிரி சாலை வணிக வளாகக்கடைகள், லூம்வேர்ல்டு வணிக வளாகக்கடைகள், நேதாஜி வணிக வளாக கடைகள் என மொத்தம் 425 கடைகள் மூலம் ரூ. 2.64 கோடி வருவாய் கிடைக்கும்.

தினசரி சந்தைகள், வாரச்சந்தைகள், பேருந்து நிலைய நுழைவுக் கட்டணம், டிவி விளம்பரம், தங்கும் விடுதி, பொருள் பாதுகாப்பு அறை, ஆடு வதைக்கூடம் போன்ற ஓராண்டு குத்தகை இனங்கள் மூலம் ரூ. 1.92 கோடி வருவாய் கிடைக்கும்.

பட்ஜெட்டின்படி மாநகராட்சிக்கு வருவாய் நிதி மூலம் ரூ. 137.95 கோடியும், குடிநீர் நிதி மூலம் ரூ. 17.36 கோடியும், கல்வி நிதி மூலம் ரூ. 5.64 கோடியும் என மொத்தம் ரூ. 160.95 கோடி வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், வருவாய் செலவினம் மூலம் ரூ. 146.06 கோடி, குடிநீர் செலவினம் மூலம் ரூ. 21.23 கோடி, கல்வி செலவினம் மூலம் ரூ. 5.20 கோடி என மொத்தம் ரூ. 172.49 கோடி செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ. 11.55 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பற்றாக்குறையை ஈடுசெய்ய நடவடிக்கை: பட்ஜெட்டில் ஏற்பட்டுள்ள ரூ. 11.55 கோடி பற்றாக்குறையைச் சமாளிக்க கூடுதல் வருவாய் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

வருவாய் செலவினத்தில் ஏற்படும் ரூ. 8.11 கோடி பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் இதர பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் இரு சக்கர வாகன பாதுகாப்பு நிலையங்கள், நான்கு சக்கர வாகன பாதுகாப்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கு தனியாக வரி நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் செலவினத்தில் ஏற்படும் ரூ. 3.88 கோடி பற்றாக்குறையை ஈடுசெய்ய குடிநீர்க் கட்டணத்தை உயர்த்தவும், ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டம் மூலம் புதிதாக வழங்கப்படும் குடிநீர் இணைப்புகளுக்கு வைப்புத்தொகையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேயர் அறிவிப்பில் முக்கிய அம்சங்கள்

ஈரோடு மாநகராட்சி பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்:


1. மொத்த பட்ஜெட் நிதியில் 25 சதவிகிதம் குடிசை வாழ் மக்கள் பயன்பெறும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

2. புதிய வரிகள் ஏதும் இல்லை.

3. அப்துல்கனி மார்க்கெட்டில் நவீன வசதிகளுடன் கூடிய ஜவுளிச்சந்தை வளாகம் அமைக்கப்படும்.

4. மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேலும் 3 இடங்களில் கூடுதலாக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

5. ரூ. 400 கோடி மதிப்பில் ஊராட்சிக்கோட்டையில் இருந்து குடிநீர் எடுத்துவரும் திட்டம் நடப்பு ஆண்டில் தொடங்கப்படும்.

6. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பிரப் சாலையையும், சென்னிமலை சாலையையும் இணைக்கும் 80 அடி திட்டச்சாலை அமைக்க ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு.

7. மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை ஊக்கப்படும் வகையில் அரசுப் பொதுத்தேர்வுகளில் (எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2) முதல் மூன்று மதிப்பெண்களைப் பெறுவோருக்கு சிறப்புப்பரிசு வழங்கும் திட்டம் அறிமுகம்.

8. மாநகராட்சிப் பகுதியுடன் இணைந்த உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தேவை அறிந்து தரம் உயர்த்த நடவடிக்கை.

9. காந்திஜி சாலையில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்கள் பிரசவம் முடிந்து வீடு திரும்பும் வரை ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் அறிமுகம்.

10. சொத்துவரி, தொழில்வரி, குடிநீர்க் கட்டணம் ஆகியவற்றை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி நடப்பு ஆண்டில் அறிமுகம்.

11. ஈரோடு பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ஏடிஎம் வசதி அறிமுகம்.

12. மாநகராட்சியுடன் புதிதாக இணைந்த பகுதிகளில் 6 புதிய பூங்காக்கள் உருவாக்க ரூ. 60 லட்சம் ஒதுக்கீடு.

13. மாநகராட்சி அலுவலக கட்டடங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை சூரியஒளி மூலம் பெற ரூ. 2.20 கோடி ஒதுக்கீடு.

14. மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மட்கும் கழிவுகளைப் பயன்படுத்தி தினமும் 9,600 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் பயோகேஸ் மெத்தனேசன் நிலையம் அமைக்க ரூ. 90 லட்சம் ஒதுக்கீடு.

15. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சூளை பேருந்து நிறுத்தம், திண்டல் பேருந்து நிறுத்தம், ஆர்.என்.புதூர் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் ரூ. 11.50 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படும்.

16. பாதாள சாக்கடைத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பகுதிகளான சம்பத்நகர் சாலை மற்றும் இதர சாலைகளைச் சீரமைக்கும் பணி 19.51 கி.மீ. தூரத்துக்கு ரூ. 10.21 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். பிற இடங்களில் 25.24 கி.மீ. தூரத்துக்கு சாலைகளைச் சீரமைக்க ரூ. 10.47 கோடியில் கருத்துருக்கள் தயாரிக்கப்படும்.

17. பெரும்பள்ளம் ஓடையை சுத்தம் செய்து கான்கிரீட் தளம், பக்கச்சுவர், ஓரத்தில் சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

18. அரசுத் தலைமை மருத்துவமனை அருகே நெடுஞ்சாலைத் துறை மூலம் மேம்பாலம் அமைக்கும் பணியைத் தொடங்க உரிய நடவடிக்கை.

19. சாலையில் வசிப்பவர்களுக்கு இருப்பிடம், உணவு, குளியல் அறை, கழிப்பறை வசதியுடன் கூடிய வளாகத்தை வ.உ.சி. பூங்கா பகுதியில் அமைக்க ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு.

20. மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளின் உடல்நலத்தையும், மனதையும் சீராக்கும் வகையில் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்.

21. மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் ஊக்கப்பரிசு வழங்கும் திட்டம் அறிமுகம்.
Last Updated on Thursday, 28 March 2013 09:40
 

புதிய குடிநீர்த் திட்டம், 179 ஆழ்குழாய்க் கிணறுகள்: பட்ஜெட்டில் அறிவிப்புகள் ஏராளம்

Print PDF
தினமணி     28.03.2013

புதிய குடிநீர்த் திட்டம், 179 ஆழ்குழாய்க் கிணறுகள்:  பட்ஜெட்டில் அறிவிப்புகள் ஏராளம்


திருப்பூர் மாநகரின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். 179 ஆழ்குழாய்க் கிணறுகள், இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்திப் பணிகள் என பல்வேறு திட்டங்கள் குறித்து பட்ஜெட் உரையில் மேயர் அ.விசாலாட்சி புதன்கிழமை தெரிவித்தார்.

மேயர் அ.விசாலாட்சி பேசியது:

திருப்பூர் மாநகரின் கூடுதல் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய குடிநீர்த் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். கோடை காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் 179 மின்விசை பம்புகளுடன் கூடிய ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்படும். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகத்திற்கு கூடுதலாக குடிநீர் விநியோக குழாய்கள் பதிக்கவும், சிறிய அளவு குழாய்களை மாற்றவும் ரூ.14.40 கோடி, ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்க ரூ.13 கோடி, சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு குளோரினேசன் பிளாண்ட் அமைக்க ரூ.2 கோடி, பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரிவுபடுத்தி குழாய்கள் அமைக்க ரூ.50 லட்சம், தார்ச் சாலைகள் அமைக்க ரூ.47.30 கோடி, கான்கிரீட் சாலைகள் அமைக்க ரூ.1 கோடி, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட, ஏற்கெனவே உள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.26.05 கோடி, பிளாஸ்டிக் கழிவு சேகரிக்க கிடங்குகள் அமைக்க ரூ.27 லட்சம், தெரு நாய்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ரூ.26.17 லட்சம், கொசுக்களை ஒழிக்க புகைப்போக்கி இயந்திரங்கள் வாங்க ரூ.4 லட்சம், தெற்குப் பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்க ரூ.90 லட்சம், மீன் விற்பனை அங்காடி கூடுதலாக அமைக்க ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகமாகக் கூடும் பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் பொது சுகாதார நலன் கருதி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் டாய்லெட் திட்டம், துப்புரவுத் தொழிலாளர்களுக்காக தளவாடச் சாமான்கள் வாங்குவதற்கு ரூ.50 லட்சம், மருத்துவமனைகள், மக்கள் கூடும் இடங்களில் எலிகளை ஒழிக்க, இந்த நிதியாண்டில் ரூ.2 லட்சம், நொய்யல் ஆற்றில் ஆகாயத்தாமரைகளை அகற்ற ரூ.10 லட்சம், தூய்மைமிகு திருப்பூர் திட்டத்தின் கீழ் 75 ஏக்கரில் மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்க மற்றும் தண்ணீர் வசதி செய்ய இந்த நிதியாண்டில் ரூ.4 லட்சம், பூங்காக்கள் அமைக்க மற்றும் பராமரிக்க ரூ.3.61 கோடி, சூரிய ஒளி மின்சக்தி வசதியை ஏற்படுத்த ரூ.1.50 கோடி, மாநகராட்சி மருத்துவமனைகள் பராமரிப்புக்கு ரூ.60 லட்சம், மாநகராட்சிப் பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.2.91 கோடி, முதலாவது மண்டலத்தில் ரூ.2 கோடி செலவில் ஆடு வதைக் கூடம், தெருவிளக்குகள் அமைக்க ரூ.3 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழைய பேருந்து நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.25 லட்சம், புதிய பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.5 கோடி, பழைய பேருந்து நிலையம் எதிரில் தினசரி அங்காடி அமைக்க ரூ.13 கோடி, மலர் அங்காடியை நவீன முறையில் கட்டுவதற்கு ரூ.4.10 கோடி, ரிசர்வ் சைட்களை வேலி அமைத்துப் பாதுகாக்க ரூ.30 லட்சம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.10 கோடி, வாகனங்கள் வாங்க ரூ.2 கோடி, கூடுதலாக குப்பை சேகரிக்கும் கலன்கள் வாங்க ரூ.1 கோடி, 50 டன் கழிவைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு ரூ.90 லட்சம், நகர மண்டபத்தை மேம்படுத்த ரூ.50 லட்சம், 6 இடங்களில் உயர் நடைபாதை அமைக்க ரூ.4.03 கோடி, 2-ஆவது, 4-ஆவது மண்டல அலுவலகங்களை புதிதாகக் கட்ட ரூ.3 கோடி, மண்டல அளவில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ரூ.50 ஆயிரம் என்பதை ரூ.1 லட்சமாக உயர்த்தி, இதற்காக தலா ரூ.2 கோடி வீதம் மொத்தம் ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் தெருவிளக்குகள், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை பணிக்கு என ரூ.131 கோடி அரசு மானியம் வழங்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மண்டல அலுவலகங்களில் படிப்பகம், நிரந்தர கண்காட்சி வளாகம், மக்களைத் தேடி மாநகராட்சி செல்லும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
 

மாநகராட்சி பட்ஜெட்டில் புது திட்டங்கள் இல்லை சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம்

Print PDF
தினமலர்        27.03.2013

மாநகராட்சி பட்ஜெட்டில் புது திட்டங்கள் இல்லை சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம்


சேலம்: சேலம் மாநகராட்சியில், 2013-14ம் ஆண்டு பட்ஜெட்டில், சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில், 2013-14ம் ஆண்டு பட்ஜெட்டில் தனிக்குடிநீர் திட்டம், பாதாளசாக்கடை திட்டம், திருமணி முத்தாறு, இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணி, திடக்கழிவு மேலாண்மை திட்டம் போன்றவை குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலான திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறாதது, பல்வேறு தரப்பினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பட்ஜெட் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

*சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, ஐந்து ரோடு சந்திப்பு, ஏ.வி.ஆர்., ரவுண்டானா, குரங்குசாவடி ஆகிய பகுதிகளில், மூன்று புதிய பாலங்கள் அமைக்கப்பட உள்ளது.

*எருமாப்பாளையம், மணியனூர், வீராணம் குப்பை மேடுகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், பயோமைனிங் முறையில் அல்லது நவீன முறையில் மூடுதளம் அமைத்து, அதன் மேல் புல் தரைகள் அமைத்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்கப்படும்.

*வ.உ.சி., மார்க்கெட்டை புதிய வடிவில், நவீனமாக்குவது.

*பழைய பஸ் ஸ்டாண்டில், நவீன முறையில் புதிய கட்டிடங்கள் கட்டுவது.

*மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் திருமணி முத்தாற்றின் கரைகளில், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம்.

*தனியார் பங்களிப்பின் உதவியோடு, புது பஸ் ஸ்டாண்ட், திருமணி முத்தாற்றின் குறுக்கே நவீன முறையில், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் அமைத்தல்.

*பொன்னம்மாப்பேட்டை ரயில்வே கிராஸிங் பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்தல்.

*பசுமைத்திட்டத்தை ஊக்குவிக்க, 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல்.

*மாநகராட்சியில், 16 ஆயிரத்து, 840 மின்சார சேமிப்பு தெருவிளக்குகள் அமைத்தல்.

*ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் போன்றவற்றறை பரிசோதனை செய்வதற்கான ஆய்வகத்தை ஏற்படுத்துவது.

*பொன்னம்மாப்பேட்டை, அரிசிப்பாளையம், அம்மாப்பேட்டை, தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, கோட்டை, குகை, பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைகளை, ஒரு கோடி ரூபாய் செலவில் புதுப்பித்தல்.

*குமாரசாமிப்பட்டி தாய் சேய் நலமையம், தாதகாப்பட்டி தாய் சேய் நல மையம் அல்லது அம்மாப்பேட்டை அண்ணா மருத்துவமனை ஆகியவற்றில் புதிதாக அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின், ஓய்வு அறைகள், இரண்டு கோடி செலவில் அமைத்தல்.

*மாநகராட்சியில் உள்ள அனைத்து பஸ் ஸ்டாப்புகளிலும், ஆண்கள், பெண்கள் பயன்படுத்தும் வகையில், நவீன முறையிலான கழிப்பிட வசதி அமைத்தல்.

*ஹைதராபாத் தேசிய மீன் வளர்ச்சி கழகத்தின் நிதியுதவியுடன் குகை பகுதியில், ஒரு கோடியே ரூபாய் மதிப்பில் நவீன மீன் அங்காடி அமைத்தல்.

*மண்டலத்துக்கு, ஒன்று வீதம், நான்கு மீன் அங்காடிகள் அமைத்தல்.

*சீலநாயக்கன்பட்டி பகுதியில், பூ மார்க்கெட் அமைத்தல்.

*அம்மாப்பேட்டை - ஆத்தூர் மார்கம் மற்றும் சீலநாயக்கன்பட்டி- நாமக்கல் மார்கம் ஆகிய எல்லைகளில் வரும் பஸ்களை, பொதுமக்கள் நலன் கருதி அந்தந்த எல்லையில் நிறுத்த புதிய பஸ் ஸ்டாண்ட் அமைத்தல்.

*நரசோதிப்பட்டி பகுதியில் உள்ள வாரச்சந்தையை, தினசரி சந்தையாக மாற்றுவது.

*மாநகராட்சி பள்ளிகளில், 10, 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாற்று திறனாளிகளுக்கு, ஊக்கத்தொகை வழங்குதல்.

*மகளிர் சுகாதாரத்தை பேணும் வகையில், மகளிர் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனைகளில், சானிட்டரி நாப்கின்ஸ்களை எரியூட்டும் நவீன இயந்திரங்கள், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட உள்ளது.

*நோய் கண்காணிப்பு, நோய் தடுப்பு மற்றும் அவசர கால பிரசவம் மற்றும் பிரசவத்துக்கு மேல் சிகிச்சைக்காக, பரிந்துரை மருத்துவ குழு மற்றும் மருத்துவர்கள் பயன்பாட்டுக்கு நடமாடும் மருத்துவ வாகனம், 40 லட்சம் ரூபாய் செலவில் வாங்குதல்.

இந்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.
 


Page 5 of 31