தினமணி 24.07.2009
நெல்லை மாநகர் பகுதியில் விளம்பர பலகைக்கு கட்டணம் மூன்று மடங்கு உயர்வு
திருநெல்வேலி, ஜூலை 23: திருநெல்வேலி மாநகர் பகுதியில் விளம்பர பலகை வைப்பதற்கு கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட உள்ளது.
இதற்காக மாநகராட்சியின் மாமன்றத்தின் சாதாரணக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் இம்
மாதம் 29-ம் தேதி நடைபெறுகிறது.
கூட்டத்துக்கு மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தலைமை வகிப்பார். துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் த. மோகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
முக்கியமாக, திருநெல்வேலி மாநகர் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் விளம்பரம் செய்வதற்கு மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது.
தற்போது விளம்பர பலகைகள், சுவர் விளம்பரம் ஆகியவற்றுக்கு ஒரு மீட்டர் நீளத்துக்கு ஒரு ஆண்டுக்கு ரூ. 1,500 என கட்டணம் உள்ளது. இந்த கட்டணம் ரூ.4500 என மூன்று மடங்காக உயர்த்தப்படுகிறது.
இதற்கான தீர்மானம் மாமன்றக் கூட்டத்தில் கொண்டு வரப்படுகிறது.
இதேபோல, பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.