Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் ரூ.82 கோடியில் பாதாள சாக்கடை புனரமைப்பு

Print PDF

 தினமணி         23.12.2014

மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் ரூ.82 கோடியில் பாதாள சாக்கடை புனரமைப்பு

மதுரை மாநகராட்சியில், முந்தைய 72 வார்டு பகுதிகளில் விடுபட்ட 8 பகுதிகளில் ரூ.82.72 கோடியில் பாதாள சாக்கடை அமைத்தல் மற்றும் புனரமைப்பு பணிகளை மணிநகரம் பாதாள மாரியம்மன் கோயில் அருகில் மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.

மதுரை மாநகராட்சியில் முந்தைய 72 வார்டு பகுதிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தின் கீழ் 5 திட்டங்கள் ஒப்புதல் செய்யப்பட்டு, வைகை 2-வது குடிநீர் திட்டம் உள்ளிட்ட 3 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மீதமுள்ள பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளுக்கு திட்டமிட்ட சுமார் ரூ.600 கோடியையும் தாண்டி பலமடங்கு நிதி செலவிடப்பட்டும், பணிகள் முடியாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளன. இத்திட்டத்தை மேற்கொள்ள ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றாததால், அந்நிறுவனத்துக்கான வேலை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விடுபட்ட பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் புனரமைக்கும் பணி 9 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ரூ.82.72 கோடிக்கான திட்டம் புதிதாக தயாரிக்கப்பட்டு, வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக, மேயர் விவி ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இத்திட்டப்படி சந்தைப்பேட்டை, தவிட்டுச்சந்தை, பெரியார் பேருந்து நிலையம், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, தமிழ்ச்சங்கம் சாலை, தானப்பமுதலி தெரு, தைக்கால் தெரு, ஆரப்பாளையம் சுடுதண்ணீர் வாய்க்கால் தெரு பகுதிகளில் பாதாள சாக்கடை புனரமைத்தல் மற்றும் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைத்தல் பணி நடைபெறும்.

பழைய பாதாள சாக்கடை பணியில் புனரமைப்பு பணி 100 கிமீ தொலைவுக்கும், தெருக்களில் 450 கிமீ தொலைவுக்கும் இணைப்பு பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் 12 மாதங்களில் முடிக்கப்படும். இதன் மூலம் இப்பகுதிகளில் கழிவுநீர் கசிவு முற்றிலும் தடுக்கப்படும், என்றார்.

முன்னதாக நடைபெற்ற பாதாள சாக்கடை புனரமைப்பு பூமி பூஜை விழாவில், ஆணையாளர் சி.கதிரவன், சுந்தர்ராஜன், எம்எல்ஏ, உதவி ஆணையாளர் அ.தேவதாஸ், நகரப்பொறியாளர் ஆ.மதுரம், நகரமைப்பு அலுவலர் ஐ.ரெங்கநாதன், செயற்பொறியாளர்கள் அரசு, ராஜேந்திரன், உதவிப் பொறியாளர்கள் தேவராஜன், சொக்கலிங்கம், பிஆர்ஓ சித்திரவேல், வேலைக்குழுத் தலைவர் கண்ணகி பாஸ்கரன், மாமன்ற உறுப்பினர்கள் முருகேஸ்வரி உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

தமிழகத்துக்கு ஸ்மார்ட் நகரங்களை எங்கு அமைக்கலாம்?- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

Print PDF
தி இந்து      12.09.2014

தமிழகத்துக்கு ஸ்மார்ட் நகரங்களை எங்கு அமைக்கலாம்?- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

நாட்டில் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் நகரங்களை அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புது டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில், தமிழக உயரதிகாரி ஒருவர் பங்கேற்கிறார்.

இந்தியாவை வளர்ந்த நாடுகளுக்கு நிகராக மாற்றும் நோக்கில் நாடு முழுவதும் 100 இடங்களில் ஸ்மார்ட் நகரங்களை ரூ.7060 கோடியில் உருவாக்க, மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு திட்டம் வகுத்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டபோது தமிழகத்தில் பொன்னேரியில் ஸ்மார்ட் நகரம் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அது தொடர்பான தெளிவான அறிவிப்பு வெளிவராததால் மாநில அரசுகள் குழப்பத்தில் இருந்தன. ஸ்மார்ட் நகரம் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு அதற்கான அடுத்தக்கட்ட ஆலோசனையை நடத்த முடிவெடுத்து அனைத்து மாநிலங்களும் பங்கேற்கக் கூடிய ஆலோசனைக் கூட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) ஏற்பாடு செய்துள்ளது. புதுடெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்தில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் உயரதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் தமிழக நகர்ப்புற நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி பங்கேற்கிறார்.

கடந்த வாரம், முதல்வரை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு சந்தித்தபோது, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளிலும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கவேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இது குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது 'தி இந்து'விடம் அவர்கள் கூறியதாவது:-

புது டெல்லியில் நடக்கும் கூட்டத்தில், மத்திய அரசு, தான் உருவாக்கப்போகும் ஸ்மார்ட் நகரம் தொடர்பாக தயாரித்துள்ள வரைவு அறிக்கையைப் பற்றி மாநில அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளது. அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. அதனால் அவர்கள் முன்வைக்கும் கருத்தின் அடிப்படையிலேயே நமது அடுத்த முடிவு அமையும்.

எனினும், பொன்னேரியில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பது தொடர்பான முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அது ஜப்பான் சர்வதேச கூட்டுறவு வங்கி மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில் வெளியான தகவல். எனினும், தமிழகத்தில் 12 இடங்களில் அமைக்கப்படவேண்டுஅ என்பதே நமது எதிர்பார்ப்பு. அதேநேரத்தில் புதிதாக ஒருஇடத்தில் உருவாக்குவதை நாம் விரும்பவில்லை என்றனர்.
 

தினமணி 08.09.2014 டவுன் ஹால்' புனரமைப்புத் திட்டம் விரைவில் தொடக்கம் தில்லி மாநகராட்சியின் பழைய தலைமை அலுவலகமாக இருந்த, 150 ஆண்டு பழைமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க "டவுன் ஹால்' கட்டடம் ரூ. 50 கோடி செலவில் புனரமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்க

Print PDF
தினமணி        08.09.2014

டவுன் ஹால்' புனரமைப்புத் திட்டம் விரைவில் தொடக்கம்

தில்லி மாநகராட்சியின் பழைய தலைமை அலுவலகமாக இருந்த, 150 ஆண்டு பழைமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க "டவுன் ஹால்' கட்டடம் ரூ. 50 கோடி செலவில் புனரமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று வடக்கு தில்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து வடக்கு தில்லி மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் மோகன் பரத்வாஜ் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

டவுன் ஹால் புனரமைப்புத் திட்டத்துக்கு ரூ. 50 கோடியை அளிக்க மத்திய சுற்றுலாத் துறை கடந்த பிப்ரவரி ஒப்புதல் அளித்தது. ஆனால், மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக இத் திட்டத்துக்கு தேவையான நிதியைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாநகராட்சியின் சார்பாக ஜூன் 30-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டிய இத் திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாராகவில்லை.

இதைத் தொடர்ந்து, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரை இந்த மாத இறுதிக்குள் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். அதன் பிறகு, டவுன் ஹால் புனரமைப்புப் திட்டப் பணிகள் விரைந்து செயல்படுத்தப்பட்டு, 2 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்றார்.

டவுன் ஹால் கட்டடத்தில்தான் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 1866-ஆம் ஆண்டில் இக் கட்டடத்தை தில்லி மாநகராட்சி வாங்கியது. டவுன் ஹால் புனரமைப்புத் திட்டத்தில் கூட்ட அரங்கு புதுப்பிக்கப்படும். தில்லி வரலாறும் பாரம்பரியமும் என்ற பெயரில் அங்கு அருங்காட்சியகம் நிறுவப்படும்.

டவுன் ஹால் குறித்த வரலாற்றுத் தகவல்களையும் கட்டடக் கலை குறித்த தகவல்களையும் ஒலி-ஒளி வடிவில் சுற்றுலாப் பயணிகள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

பிரதான கட்டடத்தை ஒட்டி அமைந்துள்ள கட்டடம் பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்படும். சாந்தினி செக் பகுதியில் 1860-ஆண்டு கால கட்டட வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் வகையில் "ஹெரிடேஜ் ஹோட்டல்' உருவாக்கப்படும்.

டவுன் ஹால் வளாகத்தில் ஆசாத் பூங்காவில் உள்ள காந்தி சிலை பகுதியில் பூமிக்கடியில் வாகன நிறுத்த மையம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காந்தி சிலை தாற்காலிமாக அகற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். வாகன நிறுத்தும் மையம் உருவாக்கப்பட்டவுடன் மீண்டும் அதே இடத்தில் காந்தி சிலை வைக்கப்படும். இதே போல, டவுன் ஹால் வளாகத்தில் கைவினைப் பொருள்கள் பஜார், ஓவியக் கூடம், திறந்த வெளி அரங்கம், கண்காட்சி மையங்கள், சிற்ப பூங்கா உள்ளிட்டவற்றை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என வடக்கு தில்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.

லாரன்ஸ் இன்ஸ்டிடியூட் என்று அறியப்பட்ட டவுன் ஹால் தில்லி மாநகராட்சியின் தலைமை அலுவலகமாக இருந்தது. தில்லி மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்பட்ட பிறகு, வடக்கு தில்லி மாநகராட்சி, தெற்கு தில்லி மாநகராட்சி ஆகிய இரண்டும் மின்டோ சாலையில் புதிதாக கட்டப்பட்ட சிவிக் சென்டரில் செயல்படத் தொடங்கின. அதைத் தொடர்ந்து, டவுன் ஹால் பயன்பாடற்றுக் கிடந்தது. இந் நிலையில், நிலுவையில் உள்ள டவுன் ஹால் புனரமைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வடக்கு தில்லி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
 


Page 3 of 160