மாநகராட்சியின் அம்மா திட்டம் துவக்கம்
மதுரை மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் அம்மா திட்டத்தை (அழகிய மதுரை மாநகர் திட்டம்) 85 ஆவது வார்டு ஜான்சிராணி பூங்கா திடல் பகுதியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சனிக்கிழமை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அவர் பேசியது: மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், 100 வார்டுகளிலும் இத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
தென் மாவட்டங்களை தொழில் நகரமாக மாற்றவும், மதுரை மாநகரை வளர்ச்சி அடைந்த நகரமாக மாற்றுவதற்கு முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் உதவியாக இருக்க வேண்டும். சென்னையில் துவங்கப்பட்டதைப் போல, மதுரை மாநகராட்சிப் பகுதியிலும் விரைவில் அம்மா உணவகம் துவங்கப்பட உள்ளது என்றார்.
மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா:
அம்மா திட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள 10 குழுக்கள் மூலம், வார்டு முழுவதும் குப்பை அகற்றும் பணி, சாலையில் தேங்கியுள்ள மணல் குவியல்கள் மற்றும் கட்டடக் கழிவுகளை அகற்றுதல், திறந்தவெளிச் சாக்கடை மற்றும் மழைநீர் வாய்க்கால் சுத்தப்படுத்தும் பணி, குடிநீர் அடிபம்ப் பழுது நீக்குதல் மற்றும் குடிநீர் கசிவை தடுத்தல், பாதாளச் சாக்கடை அடைப்பை நீக்குதல், ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, தெருவிளக்கு பராமரிப்பு, கொசு ஒழிப்பு, பொது கழிப்பறைகள் பராமரிப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மரம் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார். மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.