தினமணி 27.07.2009
அம்பையில் ரூ. 15 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்க விழா
அம்பாசமுத்திரம், ஜூலை 26: அம்பாசமுத்திரத்தில் சனிக்கிழமை ரூ. 15 லட்சத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் திறந்துவைத்தார்.
அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சின்னசங்கரன்கோவில், ஊர்க்காடு பகுதிகளில் தலா ரூ. 2.70 லட்சத்தில் நவீன கழிப்பிடம், ரூ. 2.50 லட்சத்தில் அங்கன்வாடி மையம் உள்பட ரூ. 15 லட்சம் மதிப்பில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டப் பணிகள் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் கே.கே.சி. பிரபாகரன் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி ப. குற்றாலிங்கம், துணைத் தலைவர் ஆர். அந்தோனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழிப்பிடம் மற்றும் அங்கன்வாடி மையங்களை பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் திறந்துவைத்தார்.
தொடர்ந்து பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 398 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளை அவர் வழங்கினார்.
தனி வட்டாட்சியர் பெ. சின்னச்சாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஆ. முருகேசன், ஏ.சி. ராதாகிருஷ்ணன், க. ஆரோக்கியமேரி, சிவன்பார்வதி, லோகநாயகி, விநாயகமூர்த்தி, ஜோதிகலா, அலெக்ஸ், அ. காஜாமைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.