மாலை மலர் 09.09.2009
சிறுமுகை பேரூராட்சியில் ரூ.52 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்
மேட்டுப்பாளையம், செப். 9-
கோவை மாவட்டம் சிறுமுகை பேரூராட்சிக்கு அனைத்து பேரூராட்சிகள் அண்ணா மறுமலர்ச்சித்திட்டம் 2009-2010-ன் கீழ் ரூ.51 லட்சத்து 50 ஆயிரத்தை ஒதுக்கியது. அரசு ஒதுக்கிய இந்த நிதியில் இருந்து சத்தி மெயின்ரோடு ராம்நகர் முதல் மற்றும் வடிகால் அமைத்தல் பணிகள் நடைபெறுகிறது.
லிங்காபுரம் மேல்நிலைத்தொட்டியில் இருந்து மொக்கைமேடு மற்றும் காந்தவயல் வரை குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல், திம்மராயம்பாளையத்தில் பொதுகழிப்பிடம் கட்டுதல் நடைபெறுகிறது.
8-வது, 4-வது வார்டு குடிசைப்பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைத்தல், சிறுமுகை வாரச்சந்தையில் கான்கிரீட் தளம் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தல், மூலத்துறை மயானத்தை மேம்படுத்தி தார்சாலை மற்றும் கம்பிவேலி அமைத்தல் ஆகிய பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 50 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன.
இதுபற்றி செயல் அலுவலர் கல்யாணசுந்தரம் கூறியதாவது:- அண்ணா மறுமலர்ச்சித் திட்டப்பணிகள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் முடிவடைந்து விடும். அரசின் அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் திட்டப்பணிகளை முதலில் செய்து முடிக்கும் பேரூராட்சியாக சிறுமுகை பேரூராட்சி விளங்கும் என்ற கூறினார்.