Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அரைகுறை சாலை பணிகள்; மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

Print PDF

தினமலர்    30.12.2014

அரைகுறை சாலை பணிகள்; மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

சென்னை: சென்னையில் அரைகுறையாய் உள்ள சாலை பணிகள் குறித்து, மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என, மேயர் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் விக்ரம் கபூர் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 10 ஆயிரம் சாலைகள் திட்டத்தின் கீழ், திரு.வி.க., நகர் மண்டலத்தில் போடப்பட உள்ள சாலைகளுக்கு ஒப்புதல், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் மூன்றின் சேமிப்பு நிதி மூலம் அம்பத்துார் மண்டலத்தில் போடப்பட உள்ள சாலைகளுக்கான ஒப்புதல் குறித்த தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சி மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்தது. தங்களது வார்டு மக்களின் குறைகளை எடுத்துரைக்க வேண்டிய கவுன்சிலர்களில் பலர் வழக்கம்போல் வராததால், இருக்கைகள் காலியாக கிடந்தன.

இந்த தீர்மானங்களின் மீதான விவாதத்தில் பேசிய ராயபுரம், சோழிங்க நல்லுார், திருவொற்றியூர், தேனாம்பேட்டை மண்டலங்களை சேர்ந்த கவுன்சிலர்கள் சிலர், தங்கள் பகுதியில் 10 ஆயிரம் சாலைகள் திட்டம், கான்கிரீட் சாலைகள் அமைக்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் சாலை பணிகள் துவங்கி, அரைகுறையாய் கிடப்பதாக புகார் தெரிவித்தனர்.

17,663 சாலைகள்

இதுகுறித்து, கவுன்சிலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், மேயர் சைதை துரைசாமி பதிலளித்து பேசியதாவது:

அரைகுறையாய் உள்ள கான்கிரீட் சாலைகள், கான்கிரீட் அமைத்து, 'பேவர் பிளாக்' அமைக்காமல் உள்ள இடங்களில், மூன்று மாதங்களில் அனைத்து பணிகளையும் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 10 ஆயிரம் சாலைகள் திட்டத்தில் பணிகள் முடிக்கப்பட்டது போக, மீதமுள்ள சாலை பணிகள், வேகப்படுத்தப்பட்டு, வரும் ஏப்ரல் மாதம் அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.

கடந்த, மூன்று ஆண்டுகளில், 2,531 கோடி ரூபாய் செலவில், 2,757 கி.மீ., துாரத்திற்கு, 15,519 தார் சாலைகள் அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. அதேபோல, 303 கோடி ரூபாய் செலவில், 778 கி.மீ., துாரத்திற்கு, 2,144 சாலைகளை கான்கிரீட் சாலையாக அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 17,663 சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

ரூ.468 கோடியில் திட்டம்!

சமீபத்திய மழைக்கு சல்லடையாகி போன பேருந்து சாலைகளை, முழுமையாக சீரமைத்து, புதுப்பொலிவுடன் மாற்ற மாநகராட்சி மதிப்பீடு தயாரித்துள்ளது. அதன்படி, 183 சாலைகள் முழுமையாக சீரமைக்கப்பட உள்ளன. இதற்கு, 468.54 கோடி ரூபாய் செலவாகும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் கூறியதாவது:

தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 46 சாலைகள், 106.66 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட உள்ளன. இதில், 74.88 கோடி ரூபாயை, மாநில அரசு மானியமாக வழங்கியுள்ளது. மீதம் தேவைப்படும் 31.78 கோடி ரூபாய் மாநகராட்சி நிதியில் செலவு செய்யப்படும்.

இதை தவிர, 137 பேருந்து சாலைகளை சீரமைக்க, 361.18 ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு, சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட நிதி, பெருநகர கட்டமைப்பு மேம்பாட்டு நிதி பெறப்படும்.

புதுப்பொலிவுடன்...

புதிதாக அமைக்கப்படும் பேருந்து சாலைகள், முழுமையான வடிவமைப்புடன், மழைநீர் தேங்காத வகையிலும், மழைநீர் சேகரிப்பு, வடிகால், சாலை தடுப்பு, ஒளிபிரதிபலிப்பான், குறியீடுகள்

என, எல்லா அம்சங்களுடன் புதுப்பொலிவாக இருக்கும். இவ்வாறு விக்ரம் கபூர் கூறினார்.

பேருந்து சாலைகளுக்கு போடப்பட்ட புதிய மதிப்பீடுகளுக்கும், இந்த பணிகளுக்கு தேவையான நிதி ஆதாரங்களை பெறுவதற்கும் நேற்றைய மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

Last Updated on Tuesday, 30 December 2014 12:51
 

மாநகருக்கான 3-ஆவது குடிநீர்த் திட்டம் மாற்றியமைப்பு

Print PDF

தினமணி           24.12.2014

மாநகருக்கான 3-ஆவது குடிநீர்த் திட்டம் மாற்றியமைப்பு

மதுரை மாநகருக்கான 3-வது குடிநீர் திட்டத்தை வைகையிலிருந்தே செயல்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு, ரூ.290 கோடியில் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மேயர் விவி ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சியின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை சமூக அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியருடன் மேயர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாணவ, மாணவியர் எழுப்பிய வினாக்களுக்கு மேயர் பதிலுரையில் கூறியது:

மதுரை மாநகராட்சி முன்பு 72 வார்டுகளுடன் சுமார் 50 சதுர கிமீ தொலைவைக் கொண்டிருந்தது. மக்கள்தொகை 10 லட்சமாக இருந்தது. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுடன் தற்போது மாநகராட்சி எல்கை 149 சதுர கிமீ ஆகவும், மக்கள் தொகை 16 லட்சமாகவும் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் மூலம் பல்வேறு நிதியுதவிகள் பெறப்பட்டு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 மாநகராட்சி பகுதியில் வசூலிக்கப்படும் வரி வருவாய் மூலம் ஊழியர்களுக்கான சம்பளம் மாதம் ஒன்றுக்கு ரூ.12 கோடி வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாக வரி வருவாயில் நிலுவை இருக்கிறது. இதுவரை ரூ.100 கோடி வரை வரி வருவாய் நிலுவை உள்ளது. இந்த தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதியில் கடந்த காலங்களில் விடுபட்ட கட்டடங்கள், வணிக கட்டடங்களுக்கு வரிவிதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வரி மாற்றம் செய்யப்படாமல், பழைய வரிவிதிப்பு முறையே பின்பற்றப்படுகிறது. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் வரிவிதிப்பில் மாற்றம் செய்யப்படவில்லை. இப்பகுதிகளில் ரூ.19 கோடியில் 4 ஆயிரம் புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்பணியை முடிக்தவுடன், இப்பகுதிகளில் சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியின் முந்தைய 72 வார்டு பகுதிகளுக்கு 2 வைகை குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில், 3-வது குடிநீர் திட்டத்தை முல்லைப் பெரியாறிலிருந்து செயல்படுத்த ரூ.580 கோடியில் முதலில் திட்டம் தயாரிக்கப்பட்டது. திட்ட நிதி அதிகமாக இருப்பதுடன், திட்டத்தை செயல்படுத்த பல்வேறு நடைமுறை சிக்கல்கள் குறித்து உயர்அதிகாரிகள் அறிவுறுத்தியதன் பேரில், இத்திட்டம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தையும் வைகையிலிருந்தே செயல்படுத்த ரூ.290 கோடியில் புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ஏற்கெனவே வைகையில் மாநகர் குடிநீருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவையும் அதிகரிக்க அரசுக்கு கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 2 குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும் 115 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்து மாநகரில் விநியோகம் செய்யப்படுகிறது. இத்துடன் 3-வது திட்டத்துக்காக மேலும் தினமும் 61 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கும் வகையில் ஒதுக்கீடு செய்ய கோரப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 மண்டலங்களிலும் 100 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டுள்ளன, என்றார்.

மாண்புமிகு உத்தரவு வந்தது

மேயர் தொடர்ந்து கூறுகையில், அரசிடமிருந்து இன்று புதிய உத்தரவு வந்துள்ளது. இதுவரை மேயர் பதவி வணக்கத்திற்குரிய என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்தது. இனிமேல், இப்பதவி மாண்புமிகு என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் என அரசின் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.

இட்லி கடைகள் மீது பரிவு

மதுரை மாநகராட்சி பகுதியில் அதிக அளவில் சாலையோரங்களில் இட்லி கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இந்த கடைகளை மாநகராட்சியினர் அகற்றுவதும், மறுநாளே அதே இடத்தில் கடைகள் மீண்டும் வைக்கப்படுவதும் வாடிக்கையாக நடக்கிறது. மதுரையின் பெருமைகளில் இட்லியும் ஒன்றாக இருக்கிறது. இதனால், இந்தக் கடைகளில் கடுமை காட்ட இயலவில்லை. அதேசமயம் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது, என மேயர் தெரிவித்தார்.

 

மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை: மேயர் விளக்கம்

Print PDF

தினமணி       13.11.2014

மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை: மேயர் விளக்கம்

மதுரை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் விதிமீறல் கட்டடங்களுக்கு அபராதம் மற்றும் வரிவிதிப்பில் மாற்றம் செய்வது குறித்து வரிவிதிப்புக் குழுவில் முடிவு செய்யலாம், என மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா விளக்கமளித்தார்.

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், மண்டலத்தலைவர் பெ.சாலைமுத்து மற்றும் சில மாமன்ற உறுப்பினர்கள் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளில் விதிமீறல் கட்டடங்களுக்கு அபராதம் மற்றும் வரிவிதிப்பு செய்யப்படுவதில் மாற்றம் செய்ய வேண்டும். அபராதம் அல்லது வரிவிதிப்பு ஏதாவது ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திப் பேசினர்.

இதற்கு பதிலளித்து மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா கூறுகையில், விரிவாக்கப் பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட வரைபடத்தை மீறி, விதிகளுக்கு புறம்பாக கட்டடங்களை விரிவுபடுத்திக் கட்டியவர்களுக்கு சதுர அடிக்கு 50 காசு வீதம் அபராதம் மற்றும் அந்த கட்டடத்துக்கான உரிய வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், மாற்றம் செய்ய வேண்டுமானால், வரிவிதிப்புக் குழுவில் மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை தெரிவித்து, உரிய திருத்தம் செய்வது குறித்து தீர்மானங்களை நிறைவேற்றி மன்றத்துக்கு தெரிவித்தால், பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியற்ற குடிநீர் குழாய் இணைப்புகளுக்கான நடவடிக்கையில் பரிசீலனை செய்யுமாறு, சில மாமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த ஆணையர் சி.கதிரவன் கூறுகையில், இந்த விசயத்தில் மாநகராட்சி வருவாய் இழப்பு மற்றும் ஆடிட் பிரச்னை இருப்பதால், சலுகை காட்ட இயலாது என, தெரிவித்தார்.

 


Page 7 of 841