தினமலர் 21.04.2010
கழிவறைகளை விட மொபைல் போன் அதிகம்
புதுடில்லி:நம் நாட்டில் தகவல் தொடர்பு வளர்ந்த அளவுக்கு, சுகாதார வசதிகள் மேம்படவில்லை என ஐ.நா., அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார கல்வி அமைப்பின் இயக்குனர் ஜாபர் அடில், இது குறித்து அறிக்கையில் கூறியுள்ளதாவது:கடந்த 2001ல் இந்தியாவில், 1 சதவீதத்தினரிடம் கூட மொபைல் போன் இல்லை. தற்போது, 45 சதவீதம் பேரிடம் மொபைல் போன் உள்ளது. அந்த அளவுக்கு தகவல் தொடர்பு புரட்சி ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்த நாட்டின் சுகாதாரத்தை ஒப்பிடுகையில், 31 சதவீதம் பேருக்கு மட்டுமே கழிவறை வசதி உள்ளது. மற்றவர்கள் திறந்தவெளியில் தான் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.வரும் 2015ம் ஆண்டுக்குள், இந்தியாவில் 100 சதவீதம் பேருக்கு கழிவறை வசதி கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் அது முடியாத காரியமாக உள்ளது.
ஒரு கழிவறை கட்ட, குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. எனவே, 2015ம் ஆண்டுக்குள், 50 சதவீதம் பேருக்காவது கழிவறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என, முடிவு செய்யப்பட் டுள்ளது. 2025ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் கழிவறை கட்டும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஜாபர் அடில் அறிக்கையில் கூறியுள்ளார்.