தினமணி 17.07.2009
கடலூர் நகராட்சியில் ரூ.6 கோடி வரி பாக்கி
கடலூர், ஜூலை 16: ரூ. 6 கோடி சொத்துவரி பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கடலூர் நகராட்சி புதிய ஆணையர் டி.குமார் (படம்) தெரிவித்தார்.
கடலூர் நகராட்சி ஆணையராக இருந்த ரவிச்சந்திரன், காரைக்குடிக்கு மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் டி.குமார் வியாழக்கிழமை புதிய ஆணையராகப் பொறுப்பு ஏற்றார்.
டி.குமார் ஏற்கெனவே விழுப்புரம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றியவர். பதவி ஏற்றதும் ஆணையர் குமார் கூறியது:
கடலூர் நகரில் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவேன்.
கடலூர் நகராட்சியில் ரூ. 6 கோடிக்கு மேல் சொத்து வரிப் பாக்கி இருப்பதாக அறிகிறேன். வரி வசூல் செய்தால்தான் மக்களுக்கு வசதிகளைச் செய்து கொடுக்க முடியும்.
எனவே வரி பாக்கியை வசூலிக்க, ஜப்தி உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
காலதாமதம் ஆகி வரும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
நகராட்சி பொறியாளர் மனோகர் சந்திரன் உடன் இருந்தார்.