Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நல்லூர் நகராட்சி: வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.3.8 கோடி

Print PDF
தினமணி 26.06.2009
நல்லூர் நகராட்சி: வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.3.8 கோடி ஒதுக்கீடு
திருப்பூர், ஜூன் 25: நல்லூர் நகராட்சியில் ரூ.3.51 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் ரூ.29.30 லட்சத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள பணிகளும் துவக்கப்பட உள்ளன. இப்பணிகளுக்கான நிர்வாக அனுமதி புதன்கிழமை நடந்த மாமன்றக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர் நகராட்சி சாதாரணக்கூட்டம் மாமன்றத் தலைவி ஜி.விஜயலட்சுமி தலைமையில் புதன்கிழமை நடந்தது. செயல்அலுவலர் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.

நகராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் 2009-10ம் நிதியாண்டில் தார்ச்சாலை, வடிகால், பொதுக்கழிப்பிடம், கான்கிரீட் தளம், மேல்நிலைத் தொட்டி, குடிநீர் விநியோகம் அதிகப்படுத்துதல் என ரூ.2.96 கோடியில் 46 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான அங்கீகாரம் நகர் மன்றக்கூட்டத்தில் வழங்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், குடிநீர் இணைப்பு வழங்குவதால் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நகராட்சியில் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இத்தொகையில் முழு அளவில் சாலை சீரமைப்பு பணிகள் செய்ய முடியாது என்பதால் கூடுதலாக ரூ.5 லட்சம் ஒதுக்க நகர் மன்ற உறுப்பினர் வலியுறுத்தினர். அதன்படி சாலை சீரமைப்புக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கூட்டத்தில் பேசிய 5-வது வார்டு மன்ற உறுப்பினர் கந்தசாமி, நகராட்சியின் கிழக்கு பகுதியில் உள்ள 2,3,4,5 ஆகிய வார்டுகளை புறக்கணித்து 6-வது வார்டு முதல் மேற்கே உள்ள வார்டுகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

அதற்கு பதிலளித்த செயல் அலுவலர் அண்ணாமலை, மக்கள்தொகை அடிப்படையில் தான் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதற் காக கிராமமக்கள் புறக்கணிக்கப்படுவதில்லை என்றார்.

தொடர்ந்து சட்டப்பேரவை தொகுதி வளர்ச்சி நிதி ரூ. 11.60 லட்சத்தில் ரேஷன் கடை மற்றும் பள்ளிக் கட்ட டம் கட்டவும், 2008-09 பொது நிதியிலிருந்து ரூ. 29.30 லட்சம் மதிப்பில் வெளியிடப்பட்ட ஒப்பந்த புள்ளிகளுக் கான பணிகளை உடனடியாக துவக்கவும் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Friday, 26 June 2009 15:05