Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரைகுறை சாலை பணிகள்; மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

Print PDF

தினமலர்    30.12.2014

அரைகுறை சாலை பணிகள்; மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

சென்னை: சென்னையில் அரைகுறையாய் உள்ள சாலை பணிகள் குறித்து, மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என, மேயர் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் விக்ரம் கபூர் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 10 ஆயிரம் சாலைகள் திட்டத்தின் கீழ், திரு.வி.க., நகர் மண்டலத்தில் போடப்பட உள்ள சாலைகளுக்கு ஒப்புதல், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் மூன்றின் சேமிப்பு நிதி மூலம் அம்பத்துார் மண்டலத்தில் போடப்பட உள்ள சாலைகளுக்கான ஒப்புதல் குறித்த தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சி மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்தது. தங்களது வார்டு மக்களின் குறைகளை எடுத்துரைக்க வேண்டிய கவுன்சிலர்களில் பலர் வழக்கம்போல் வராததால், இருக்கைகள் காலியாக கிடந்தன.

இந்த தீர்மானங்களின் மீதான விவாதத்தில் பேசிய ராயபுரம், சோழிங்க நல்லுார், திருவொற்றியூர், தேனாம்பேட்டை மண்டலங்களை சேர்ந்த கவுன்சிலர்கள் சிலர், தங்கள் பகுதியில் 10 ஆயிரம் சாலைகள் திட்டம், கான்கிரீட் சாலைகள் அமைக்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் சாலை பணிகள் துவங்கி, அரைகுறையாய் கிடப்பதாக புகார் தெரிவித்தனர்.

17,663 சாலைகள்

இதுகுறித்து, கவுன்சிலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், மேயர் சைதை துரைசாமி பதிலளித்து பேசியதாவது:

அரைகுறையாய் உள்ள கான்கிரீட் சாலைகள், கான்கிரீட் அமைத்து, 'பேவர் பிளாக்' அமைக்காமல் உள்ள இடங்களில், மூன்று மாதங்களில் அனைத்து பணிகளையும் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 10 ஆயிரம் சாலைகள் திட்டத்தில் பணிகள் முடிக்கப்பட்டது போக, மீதமுள்ள சாலை பணிகள், வேகப்படுத்தப்பட்டு, வரும் ஏப்ரல் மாதம் அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.

கடந்த, மூன்று ஆண்டுகளில், 2,531 கோடி ரூபாய் செலவில், 2,757 கி.மீ., துாரத்திற்கு, 15,519 தார் சாலைகள் அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. அதேபோல, 303 கோடி ரூபாய் செலவில், 778 கி.மீ., துாரத்திற்கு, 2,144 சாலைகளை கான்கிரீட் சாலையாக அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 17,663 சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

ரூ.468 கோடியில் திட்டம்!

சமீபத்திய மழைக்கு சல்லடையாகி போன பேருந்து சாலைகளை, முழுமையாக சீரமைத்து, புதுப்பொலிவுடன் மாற்ற மாநகராட்சி மதிப்பீடு தயாரித்துள்ளது. அதன்படி, 183 சாலைகள் முழுமையாக சீரமைக்கப்பட உள்ளன. இதற்கு, 468.54 கோடி ரூபாய் செலவாகும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் கூறியதாவது:

தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 46 சாலைகள், 106.66 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட உள்ளன. இதில், 74.88 கோடி ரூபாயை, மாநில அரசு மானியமாக வழங்கியுள்ளது. மீதம் தேவைப்படும் 31.78 கோடி ரூபாய் மாநகராட்சி நிதியில் செலவு செய்யப்படும்.

இதை தவிர, 137 பேருந்து சாலைகளை சீரமைக்க, 361.18 ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு, சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட நிதி, பெருநகர கட்டமைப்பு மேம்பாட்டு நிதி பெறப்படும்.

புதுப்பொலிவுடன்...

புதிதாக அமைக்கப்படும் பேருந்து சாலைகள், முழுமையான வடிவமைப்புடன், மழைநீர் தேங்காத வகையிலும், மழைநீர் சேகரிப்பு, வடிகால், சாலை தடுப்பு, ஒளிபிரதிபலிப்பான், குறியீடுகள்

என, எல்லா அம்சங்களுடன் புதுப்பொலிவாக இருக்கும். இவ்வாறு விக்ரம் கபூர் கூறினார்.

பேருந்து சாலைகளுக்கு போடப்பட்ட புதிய மதிப்பீடுகளுக்கும், இந்த பணிகளுக்கு தேவையான நிதி ஆதாரங்களை பெறுவதற்கும் நேற்றைய மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

Last Updated on Tuesday, 30 December 2014 12:51