தினகரன் 08.09.2014
மாநகரில் 3,094 அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த ஆண்டிற்குள் முடிக்க திட்டம்
கோவை, : கோவையில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின்படி இந்த ஆண்டிற்குள் 3,094 அடுக்குமாடி குடியிருப்புகள் முடிக்க வீட்டுவசதி வாரியம் முடிவுசெய்துள்ளது.
சென்னை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின்படி குடிசை பகுதி வாழ் குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய முடிவுசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை, கோவை, மதுரையில் 44,870 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், கோவையில் உக்கடம், அம்மன் குளம் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்ப ட்டு வருகிறது. இதில், உக் கடம் பகுதி ஒன்றில் ரூ.118.48 கோடியில் 2,232 அடுக்குமாடி குடியிருப்புகள், உக்கடம் பகுதி 2ல் ரூ.33.96 கோடியில் 816 அடுக்குமாடி குடியிருப்புகள், அம்மன் குளம் பகுதியில் ரூ.23.44 கோடியில் 792 வீடுகள் மற்றும் உக்கடம் பகுதி 3ல் ரூ.435.43 கோடியில் 9,600 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் ரூ.611.31 கோடியில் 13 ஆயிரத்து 440 குடியிருப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், தற்போது 2,632 குடியிருப்புகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டிற்குள் 3,904 குடியிருப்புகளை முடிக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், இப்பணிகளை முடித்து உடனடியாக 6,904 அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்கும் பணிகள் துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.