Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி மகப்பேறு மையங்களில் பிரசவ எண்ணிக்கை இரட்டிப்பு!

Print PDF

 தினமலர்     19.08.2014

 மாநகராட்சி மகப்பேறு மையங்களில் பிரசவ எண்ணிக்கை இரட்டிப்பு!

கோவை : கோவை மாநகராட்சி மகப்பேறு மையங்களில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, பிரசவ எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

கோவை மாநகராட்சியில், 20 மகப்பேறு மையங்களில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், சிகிச்சை பெருகின்றனர். கடந்தாண்டு, ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்றாலும், 1,136 சுகப்பிரசவங்கள் மட்டுமே நடந்தன.மாநகராட்சி மகப்பேறு மையத்திற்கு கர்ப்பகால தொடர் சிகிச்சைக்கு வரும் பெண்கள், 'சிசேரியன்' வசதி இல்லாததால், பிரசவத்துக்கு அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அதனால், சீத்தாலட்சுமி மகப்பேறு மையத்தில், 'சிசேரியன்' அறுவை சிகிச்சை வசதி ஏற்படுத்தி பிரசவம் பார்க்கப்படுகிறது.

மாநகராட்சி சுகாதாரப்பிரிவு மூலம் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு நடவடிக்கைகளால், கடந்த ஜன., மாதம் முதல் பிரசவ எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தற்போது, சிசேரியன் பிரிவும் துவங்கப்பட்டுள்ளதால், பிரசவ எண்ணிக்கை மேலும், 30 சதவீதம் உயரும் என, அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, பிரசவ எண்ணிக்கை இரட்டிபாகியுள்ளது.மகப்பேறு மையங்களில், ஜனவரியில் ௧௫௪, பிப்ரவரியில் 147, மார்ச்சில் 177, ஏப்ரலில் 182, மே மாதம் 200, ஜூன் மாதம் 222, ஜூலையில் 243, ஆகஸ்ட்டில் கடந்த 14ம் தேதி வரை 110 பிரசவங்கள் நடந்துள்ளன. மகப்பேறு மையங்களில் இந்தாண்டு இதுவரை 1,435 குழந்தைகள் பிறந்துள்ளன. கடந்த ஆண்டு குழந்தை பிறப்புடன் ஒப்பிடும் போது, இரட்டிப்பு எண்ணிக்கை என்பதால், மாநகராட்சி அதிகாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மீதமுள்ள நான்கு மாதங்களிலும், குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறையாமல், சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அருணா கூறுகையில், ''மகப்பேறு மையத்தில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு, பிரசவத்திற்கு முன்பாக முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு உதவித்தொகையாக நான்காயிரம் ரூபாயும், குழந்தை பிறந்ததும் இரண்டாம் கட்ட நிதியுதவியாக நான்காயிரமும், குழந்தைக்கு முத்தடுப்பு ஊசி போட்டு முடித்ததும் மூன்றாம் கட்டமாக நான்காயிரமும் நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகளுக்கு தலா 600 ரூபாய்க்கு ஜனனிசுரக்ஷா யோஜனா திட்டத்தில் டெபாசிட் செய்யப்படுகிறது. சுகாதாரம், அடிப்படை வசதிகள், மருத்துவ மேம்பாடுகளை இதேபோன்று தொடர்ந்து கடைபிடிக்கவும், பிரசவ எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.

'சிறப்பு மருத்துவ கவனிப்பு' : கமிஷனர் லதா கூறுகையில், ''மகப்பேறு மையங்களில் கடந்த ஆண்டு சராசரியாக 79 குழந்தைகள் பிறந்தன. இந்தாண்டு ஜூலை மாதம் மட்டும் 243 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தாண்டு குழந்தை பிறப்பு சதவீதம் இரண்டு மடங்கு அளவுக்கு மேல் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசு நிதியுதவி, மருத்துவ உதவிகள், உதவி பொருட்கள், சத்தான உணவு, ஒவ்வொரு தாய்மாருக்கும் சிறப்பு மருத்துவ கவனிப்பு உறுதியாக கிடைப்பதால், மகப்பேறு மையங்களில் பிரசவ எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாம்'' என்றார்.