Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்துக்கு மின் கட்டணம் செலுத்தப்பட்டது

Print PDF

தினமணி                30.01.2014

திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்துக்கு மின் கட்டணம் செலுத்தப்பட்டது

சேலம் செட்டிச்சாவடியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளைச் செய்து வரும் நிறுவனத்துக்கு, மாநகராட்சி நிர்வாகம் புதன்கிழமை இரவு மின் கட்டணத்தை செலுத்தியது. இதையடுத்து, திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் வியாழக்கிழமை (ஜன.30) முதல் செயல்படத் தொடங்கும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சேலம் செட்டிச்சாவடி பகுதியில் இயங்கி வரும் குஜராத்தைச் சேர்ந்த ஹன்ஜர் என்ற தனியார் திடக்கழிவு மேலாண்மை நிறுவனம், மின் கட்டணம் செலுத்தாதது உள்ளிட்ட சில நிர்வாக பிரச்னைகள் காரணமாக கடந்த சில வாரங்களாக தனது பணியை நிறுத்தியது.

நிறுவனம் பூட்டப்பட்டதால் சேலம் மாநகரப் பகுதியில் சேகரமாகும் குப்பைகளை நிறுவனத்துக்கு வெளியே உள்ள இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் கொட்டி வந்தது.

இதற்கு செட்டிச்சாவடி, அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

கடந்த 3 நாள்களாக மாநகராட்சியின் குப்பை லாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து, சேலம் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இந்த நிலையில் பிரச்னை தீவிரமடைந்ததை அடுத்து, தனியார் நிறுவனப் பிரதிநிதிகள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்க் கோட்டாட்சியர் சதீஷ் தலைமையில் புதன்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

செயற்பொறியாளர் அசோகன், ஆலை நிர்வாகி நிதீம் பர்னிச்சர் வாலா, வட்டாட்சியர் சுரேஷ், காவல் உதவி ஆணையர் உதயகுமார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

தனியார் நிறுவனப் பிரதிநிதி நிதீம் பேசும்போது, ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அதற்கு பணம் செலுத்த 15 நாள்கள் அவகாசமும், வெளியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற 45 நாள் அவகாசமும் வழங்கும்படி கேட்டார்.

ஆனால் மாநகராட்சியும், பொதுமக்களும் இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்ததை அடுத்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

பின்னர் பிற்பகலிலும், இரவிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

இதில், தனியார் நிறுவனத்துக்கான மின்சாரக் கட்டணம் ரூ.5.70 லட்சத்தை செலுத்த மாநகராட்சி அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.

இதற்காக கேட்பு வரைவோலையை இரவோடு இரவாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தனர்.

மின் இணைப்பு கிடைத்ததும் வியாழக்கிழமை காலை முதல் ஆலை செயல்படத் தொடங்கும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தனியார் ஆலைக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.20 லட்சம் செலுத்த வேண்டியிருப்பதாகவும், அந்தத் தொகையில்தான் ரூ.5.70 லட்சம் கழித்துக் கொள்ளப்படும் என்றும், இதனால் மாநகராட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.