Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சியின் வருவாய் அதிகரிப்பு

Print PDF

தினத்தந்தி            13.12.2013

கோவை மாநகராட்சியின் வருவாய் அதிகரிப்பு

சொத்து வரி, தொழில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை தொடர்ந்து கோவை மாநகராட்சியின் வரி வருவாய் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

வரி வருவாய் அதிகரிப்பு

கோவை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சிக்கு சொத்துவரி, தொழில் வரி, மற்றும் குடிநீர் கட்டணம், அபாயகரமான பொருட்களை பாதுகாப்புடன் வர்த்தகம் செய்வதற்கான அனுமதி கட்டணம், மற்றும் மாநகராட்சி வணிக வளாக வாடகை, காலியிட வரி, வீடுகள் கட்டுவதற்கான வரைபட அனுமதி ஒப்புதல் ஆகியவற்றின் மூலம் வருவாய் கிடைத்து வருகிறது.

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில் வரி, வீடு கட்டுவதற்கான திட்டவரைவு அனுமதி ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செலுத்தவும், ஆன்லைன் மூலம் ஒப்புதல் பெறுவதற்கான வசதியும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டது. வரி செலுத்தாதவர்களின் பட்டியலும் ஆய்வு செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமியின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக கோவை மாநகராட்சியின் வரி வருவாய் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது.

ரூ.157 கோடி

இதன்படி கடந்த ஜூன் மாதம் மட்டும் வரி வருவாய் கடந்த ஆண்டைவிட 2 சதவீதம் அளவுக்கு குறைந்து இருந்தது. அதன்பின்னர் தொடர்ந்து வரி வருவாய் உயர்ந்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம்வரை மொத்தம் ரூ.157 கோடி ரூபாய்வரை வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 24.15 சதவீதம் அளவுக்கும், மே மாதம் 30.07 சதவீதம் அளவுக்கும், ஜூலை மாதம் 21.28 சதவீதம் அளவுக்கும், ஆகஸ்டு மாதம் 59.43 சதவீதம் அளவுக்கும், செப்டம்பர் மாதம் 32.32 சதவீதம் அளவுக்கும், அக்டோபர் மாதம் 55.64 சதவீதம் அளவுக்கும், நவம்பர் மாதம் 32.68 சதவீதம் அளவுக்கும் வரி வருவாய் உயர்ந்துள்ளது.

எண்ணிக்கையும் அதிகரிப்பு

தொழில் வரி, சொத்துவரி உயர்ந்துள்ளதுடன், வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதன் காரணமாக வருவாய் உயர்ந்துள்ளது. கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் விடுபட்ட கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளும் சொத்துவரி செலுத்தும் பட்டியலுடன் புதிதாக இணைக்கப்பட்டது. இதன்படி கடந்த 2012-13-ம் ஆண்டில் சொத்துவரி செலுத்தும் பட்டியல் 23,510 அளவுக்கு புதிதாக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களில் மட்டும் 18 ஆயிரத்து 391 எண்ணிக்கை சொத்துவரி செலுத்தும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருவாய் ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டும் சொத்து வரி வருமானம் ரூ.11 கோடியே 77 லட்சம் உயர்ந்துள்ளது.

உடனடியாக செலுத்தும் வசதி

காலியிட வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 4,994 அளவுக்கு கூடுதலாக உயர்ந்துள்ளது. தொழில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை உயர்த்த தொழில் நிறுவனங்கள், தொழில் அமைப்புகள், மற்றும் பிற அரசு துறை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் கலந்துபேசி தொழில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

மாநகராட்சி வரி வருவாய் உயர்ந்து இருப்பதன் காரணமாக, மாநகராட்சிக்கு கடன் உதவி அளிக்கும் வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்கள் மாநகராட்சியின் திரும்ப செலுத்தும் வசதி அதிகரித்து இருப்பதன் மூலம் திட்ட மேம்பாடுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.