தினமலர் 19.11.2013
சூரிய மின்மயமாகிறது நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம்
சென்னை, நகராட்சி ஆணையர் அலுவலகத்தில், 1 கோடி ரூபாய் செலவில், சூரிய மின் உற்பத்தி நிலையம், அமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், நிலவும் மின் பற்றாக்குறையை, சமாளிக்க, சூரிய மின் உற்பத்தி கொள்கையை, தமிழக அரசு, அறிவித்து உள்ளது. இதன்படி, தனியார் வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில், சூரிய மின் உற்பத்தியை, அதிகரிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது. தனியார், சூரிய மின் உற்பத்தியை, மேற்கொள்ள, அரசு மானியம் அளிக்கிறது. அரசு அலுவலகங்களில், அரசே, சூரியமின், உற்பத்தி நிலையங்களை அமைக்கிறது.
எழிலகத்தில்...
கவர்னர் மாளிகை, முதல்வர் அலுவலகம் ஆகியவற்றில், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், அமைக்க நடவடிக்கை, எடுக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில், சூரியமின் உற்பத்தி நிலையம், அமைக்கப்படுகிறது. சென்னை, எழிலகத்தில் உள்ள, நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில், 50 கிலோவாட், மின் திறன் கொண்ட, சூரியமின் உற்பத்தி நிலையம், அமைக்க, ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அத்துறையின், மூத்த அதிகாரி ஒருவர்,கூறியதாவது:
தமிழக அரசின், சூரிய மின் உற்பத்தி, கொள்கையின் அடிப்படையில், நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில், சூரிய மின் உற்பத்தி நிலையம், அமைக்கப்படுகிறது. ஆறு மாடிகள் கொண்ட, இந்த கட்டடத்தின் மேற்பரப்பில், 50 கிலோ வாட், திறன் கொண்ட, சூரியமின் உற்பத்தி நிலையம், அமைக்கப்பட உள்ளது.
பெரும்பகுதி கிடைக்கும்
தமிழ்நாடு, எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மத்திய அரசின் புதுப்பிக்க தக்க எரிசக்தி அமைச்சகம் ஆகியவற்றால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, இதன் கட்டுமான பணி ஒப்படைக்கப்படும்.
சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து, ஐந்தாண்டுகளுக்கு பராமரித்து தர வேண்டும் என்ற, ஒப்பந்தத்தில், பணி வழங்கப்படுகிறது.
சூரிய மின் உற்பத்தி நிலையம், அமைப்பதன் மூலம், நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்துக்கு, தேவைப்படும், மின்சாரத்தில் பெரும் பகுதி பூர்த்தியாகும். இந்த திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.