தினமலர் 13.11.2013
கடந்த அக்., 2ம் தேதி "சூன்யா' திட்டத்தில், மக்கள் ஒத்துழைப்போடு குப்பை சேகரிக்கும் பணி துவங்கியது. ஆர்.எஸ்.புரம் மேற்கு பகுதியில் டி.வி.சாமி ரோடு, பொன்னுரங்கம் ரோடு, வெங்கடசாமி ரோடு, பெரியசாமி ரோடு, பாஷ்யகாரலு வீதி ஆகிய ஐந்து வீதிகளில் உள்ள 500 வீடுகளில், குப்பை தரம் பிரிக்கப்பட்டன.
வீட்டு கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டாமல், சணல் பைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக சேகரிக்க, ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு சணல் பைகளும், ஒரு பிளாஸ்டிக் தொட்டியும் வழங்கப்பட்டது.
துப்புரவு தொழிலாளர்கள் வரும்போது, தரம் பிரித்து சேகரித்து வைத்திருக்கும் குப்பையை ஒப்படைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, அக்., 2 முதல் நவ., 12 வரை, 3.6 டன் பாலித்தீன் கழிவுகளை சேகரித்தனர். மக்காத குப்பையை ஐ.டி.சி நிறுவனம், கிலோ மூன்று ரூபாய் வீதம் விலைக்கு எடுத்துக் கொண்டது.
அந்த தொகை துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
குப்பையை தரம் பிரித்து ஒப்படைத்ததற்காக மொத்தம் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு, மாநகராட்சி சார்பில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. கோவை மாநகராட்சி மேயர் சான்றிதழ்களை வழங்கினார்.