தினகரன் 07.11.2013
ரூ5 கோடியில் கட்டப்பட்டது தாம்பரத்தில் பஸ் நிலையம் திறப்பு
தாம்பரம், : தாம்பரம் நகராட்சி சார்பில் சானடோரியத்தில் ரூ5கோடி மதிப்பில் பஸ் நிலையம் கட்ட கடந்த திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணி பல்வேறு பிரச்னைகளுக்கிடையே கடந்த மாதம் நிறைவுற்றது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் இதை திறந்து வைத்தார். புதிய பஸ் நிலையத்தில் திறப்பு விழாவுக்காக ஏற்படுகள் செய்யப்பட்டது.
இதில் கலெக்டர் பாஸ்கரன், மண்டல நகராட்சி நிர்வாக ஆணையர் லட்சுமி, தாம்பரம் நகர மன்ற தலைவர் கரிகாலன், ஆணையர் சிவசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவிற்கு பிறகு அனைத்து மாநகர பஸ்களும் அங்கு நின்று சென்றன.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பெரம்பாக்கம், போந்தூர், எழிச்சூர், மேட்டுப்பாளையம், வல்லக்கோட்டை, வாலாஜாபாத், வேலூர், ஆரணி, சித்தூர், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கான பஸ்கள் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பஸ்கள் ஏற்கனவே நின்ற இடத்தில் கிழக்கு தாம்பரம் வழியாக செல்லும் பஸ்கள் மாற்றப்படும். இந்த பஸ்கள் நின்ற இடத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் திடீர் மாற்றம்
புதிதாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் முதலில் தாம்பரம் நகராட்சி பஸ் நிலையம் என பெயர் பலகை வைக்கப்படது. பிறகு திடீரென அறிஞர் அண்ணா பஸ் நிலையம் என பெயர் மாற்றப்பட்டது.