தினமலர் 27.09.2013
மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
மதுரை:மதுரை மாநகராட்சியில், நீண்ட இடைவெளிக்கு பின், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, நேற்று நடந்தது. வெளிநாடு பயணம் ரத்தான பின், சென்னையிலிருந்து நேற்று முன்தினம் மாலை மதுரை வந்த கமிஷனர் நந்தகோபால், அன்றிரவே, டவுன்ஹால் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
நேற்று காலையும் பணி தொடர்ந்த, வடக்கு ஆவணி மூலவீதி, பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதிக்கு வந்த கமிஷனர், அங்கு 250 ச.மீ., பரப்பில் ஆக்கிரமித்து கட்டியிருந்த தகர "ஷெட்' கடைகளை அகற்ற உத்தவிட்டார்.
அங்கு வந்த பி.எஸ்.கணேசன் என்பவர், ""நான் "ஸ்டே' வாங்கியிருக்கிறேன். யாரும் இடிக்க முடியாது,'' என, வாதிட்டார். ""கமிஷனர் பெயரில் இருக்கும் இடத்திற்கு, நீங்கள் எப்படி "ஸ்டே' வாங்குவீர்கள்?; போலியான ஆவணங்களை காட்டி, உங்கள் குழந்தைகள் பெயரில் மோசடியாக கட்டட அனுமதி பெற்றிருக்கீறீர்கள்'' எனக்கூறிய கமிஷனர், ஆக்கிரமிப்பை அகற்ற, உத்தரவிட்டார்.
தகர கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அப்போது, வாகனம் முன்பு வந்து நின்ற கணேசன், ""என்னை கொன்றுவிட்டு, ஆக்கிரமிப்பை எடுங்கள்,'' என்றார். அவரை அங்கிருந்து நகர்த்திய அதிகாரிகள், ஆக்கிரமிப்பு "ஷெட்'டுகளை அப்புறப்படுத்தினார்.
மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்ததாக கணேசன் மீது, புகார் அளிக்க கமிஷனர் உத்தரவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பின் தொடங்கியுள்ள இப்பணியை, மாநகராட்சி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.