தமிழ் முரசு 04.09.2013
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15ல் துவக்கம் மாணவர்களுக்கு மனநல கவுன்சலிங்
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மனநல கவுன்சலிங் அளிக்க 14 மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று மாநகராட்சி கல்வி அலுவலர் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சியில் 32 மேல்நிலைப்பள்ளிகளும், 36 உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இங்கு ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்களில் பலரும் வறுமை மற்றும் குடும்ப பிரச்னைகள், பருவகால கோளாறுகள் உள்ளிட்டவற்றால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அவர்களால் பாடங்களில் முழுகவனம் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்தது.
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சரியாக கண்காணிப்பதில்லை. இதனால், மாணவ, மாணவிகள் சிறுவயதிலேயே காதல் என்ற பெயரில் பாலின ஈர்ப்பில் சிக்குகின்றனர். இதனால், அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. பலர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியதும், மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றுக்கு தீர்வு காண சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்கள் உள்ளது போல், மாநகராட்சி பள்ளிகளிலும் நியமிக்கலாம் என முடிவெடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி கல்வி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் உள்ள 72 உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பிஎஸ்சி(சைக்காலஜி) படித்த பட்டதாரிகள் 14 பேரை மன நல ஆலோசகர்களாக(கவுன்சலர்) நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைக்கு இதுவரை 80க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் தகுதியான 8 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 6 பேரை இம்மாதம் 15ம் தேதிக்குள் தேர்வு செய்ய உள்ளோம். கவுன்சலர்கள் தினமும் மதியம் 2 மணியிலிருந்து பள்ளி முடியும் வரை மாணவ, மாணவிகளுக்கு கவுன்சலிங் வழங்குவர்.
பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மண்டலங்களில் 2 முதல் 3 கவுன்சலர்கள் நியமிக்கப்படுவர். இவர்களின் திறமைக்கு ஏற்ப பணி நீட்டிப்பு செய்யப்படும். இந்த கவுன்சலர்கள் மாணவ, மாணவிகளின் பிரச்னைகளை அறிந்து, தனித்தனியாகவும் கவுன்சலிங் கொடுப்பார்கள். வரும் 15ம் தேதியில் இருந்து மாணவர்களுக்கு கவுன்சலிங் வழங்கப்படும். இதில் மாணவர்களுக்கு புத்துணர்வு ஏற்படுவதுடன், பள்ளிகளில் இடைநிற்றல் குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.