Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு: 26 வீடுகள் அகற்றம்

Print PDF

தினமணி                   19.07.2013

மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு: 26 வீடுகள் அகற்றம்

மதுரை மதிச்சியத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 26 வீடுகள் வியாழக்கிழமை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

 மதிச்சியம் சப்பாணி கோவில் தெருவில் மாநகராட்சிக்குச் சொந்தமான 1.25 ஏக்கர் இடம் உள்ளது. இங்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர். இந்த இடத்தை மீட்கப் பல ஆண்டுகளாக மாநகராட்சியினர் முயற்சி செய்தும், முந்தைய மக்கள் பிரதிநிதிகள் ஆதரவுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி முடக்கப்பட்டிருந்தது.

 ஆக்கிரமிப்புகள் குறித்து ஆணையர் ஆர். நந்தகோபாலுக்குப் பொதுமக்கள் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் சென்றன. இப்பகுதியில் ஆணையர் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்தனர்.   ஆணையர் முன்னிலையில் நகரப் பொறியாளர் (பொறுப்பு) அ. மதுரம், முதன்மை  நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், உதவி நகரமைப்பு அலுவலர்கள் ஏ. பழனிச்சாமி,  ரெங்கநாதன், முத்துக்குமார், நாராயணன் உள்பட 35-க்கும் மேற்பட்ட மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

 பெரும்பாலும் கான்கிரீட் மாடி வீடுகளாக இருந்தன. இவற்றை ஜேசிபி எந்திரம் மூலம் மாநகராட்சியினர் அகற்றினர். இந்த வகையில் 26 வீடுகள் உள்ளிட்ட 28 கட்டடங்கள் அகற்றப்பட்டன. இதன் மூலம் ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சி இடம் 1.25 ஏக்கர் மீட்கப்பட்டது.

 அப்பகுதி முழுவதையும் வேலி அமைத்து பாதுகாக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்தார்.