தினமணி 10.07.2013
தாராபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கொளிஞ்சிவாடி பகுதியில் செவ்வாய்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
நகரில் தற்போது ரூ.67 கோடி மதிப்பில் குடிநீர் விரிவாக்கப் பணி நடைபெறுகிறது. இதற்காக அனைத்து வார்டுகளிலும் குழிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. நகராட்சிக்குள்பட்ட 10-வது வார்டு கொளிஞ்சிவாடி பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்பு இருந்ததால், குழாய்கள் பதிக்கும் பணி துவங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையர் க. சரவணக்குமார் உத்தரவின்பேரில், அப் பகுதியில் அதிகாரிகள் குழுவினர் ஆக்கிரமிப்பை அகற்றினர். ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்பட்ட பிறகு, குடிநீர் விரிவாக்கப் பணி தொடரும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.