தினமணி 24.09.2009
திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையம்
திருக்கோவிலூர், செப். 23: திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி புதன்கிழமை நேரில் பார்வையிட்டார்.
வளர்ந்து வரும் திருக்கோவிலூரில் போதிய அளவுக்கு பஸ் நிலையம் இல்லாத நிலையில் நாளுக்குநாள் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந் நிலையில் திருக்கோவிலூர் பஸ் நிலையத்துக்கு மேற்கு திசையில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சிவராஜிக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தை புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தானமாக கொடுப்பதாக உறுதியளித்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி, மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரவன், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோர் திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக இந்த இடத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன் நேரில் பார்வையிட்டனர்.
இந் நிலையில் மீண்டும் புதன்கிழமை திருக்கோவிலூருக்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி இந்த இடத்துக்குச் சென்று வரைபடத்தைக் கொண்டு அதற்கான இடங்களை ஆய்வு செய்தார்.
பின்னர் இந்த புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்த வேலைகளைத் தொடங்க உத்தரவிட்டார்.