தினகரன் 18.06.2013
அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர போர்டுகள் அகற்றம்
மதுரை மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி மெகா சைஸ் விளம்பர போர்டுகள், அரசியல் கட்சியினரின் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை நகரின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
இதையடுத்து கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகளை அகற்றும்படி உத்தரவிட்டார். தாசில்தார்கள் கங்காதரன், வின்சென்ட் சேவியர், துணை தாசில்தார் ரவி மற்றும் வருவாய் அலுவலர்கள், மாநகராட்சி உதவி பொறியாளர் சேகர், மின்வாரிய அதிகாரி நாகராஜன் உள்ளிட்டோர் கொண்ட 8 குழுக்கள் அமைக்கப்பட்டன. மதுரை நகரில் உள்ள நான்கு மண்டலங்களிலும், ஒரு மண்டலத்துக்கு 2 குழுவினர் வீதம் சென்று அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகளை அதிரடியாக அகற்றினர்.
மெயின் ரோடுகளிலும்,
போக்குவரத்துக்கு இடையூறாகவும் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட
விளம்பர பலகைகள் நேற்று ஒரே நாளில் அகற்றப்பட்டன. அனுமதி பெற்று விளம்பர
போர்டுகள் வைத்துள்ளவர்கள், அதற்கான அத்தாட்சியை காண்பித்ததால் அந்த
போர்டுகள் அகற்றப்படவில்லை.