Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை, திருவொற்றியூரில் ரூ.139½ கோடி செலவில் 3616 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் ஜெயலலிதா திறந்து வைத்தார்

Print PDF
தினத்தந்தி             07.05.2013

சென்னை, திருவொற்றியூரில் ரூ.139½ கோடி செலவில் 3616 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் ஜெயலலிதா திறந்து வைத்தார்


 
 
 
 
 
 
 
 
 
 
சென்னை, திருவொற்றியூரில், குடிசைமாற்றுவாரியத்தின் மூலம் ரூ.139½ கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 3616 அடுக்குமாடி குடியிருப்புகளை, முதல்–அமைச்சர் ஜெயலலிதா, காணொலி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலமாக திறந்துவைத்தார். இது பற்றி, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சுனாமி தாக்குதல்

தமிழக கடற்கரை பகுதியிலிருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலினால் பெரும் பாதிப்புக்குள்ளாயின.

இதையடுத்து, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உலக வங்கி மற்றும் மாநில அரசின் நிதி உதவியுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு கடந்த 2005–ஆம் ஆண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.

ரூ.139½ கோடி

குடிசைப் பகுதிகளில் வறிய நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் போன்ற இன்னல்களுக்கு ஆளாகாமல் நல்ல உறைவிடத்தில் சுகாதாரமான சூழ்நிலையில் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் குடிசை மாற்று வாரியத்தால், சென்னை, திருவொற்றியூரில் 13.69 ஹெக்டர் பரப்பளவில், அகில இந்திய வானொலி நில திட்டப் பகுதியில் 139 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குடியிருப்புகள் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த குடியிருப்புகள் உலக வங்கி நிதியுதவியுடன் கூடிய அவசர சுனாமி மறுகுடியமர்வு திட்டம் மற்றும் மாநில நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளன.

3616 அடுக்குமாடி குடியிருப்புகள்

தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் 113 கட்டட தொகுதிகளாகக் கட்டப்பட்டுள்ள 3616 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா, நேற்று, சென்னை கோட்டையில், காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக கட்டப்பட்டுள்ள இப்புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, தெரு விளக்குகள், ஆரம்பப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், நியாய விலைக் கடை, சமுதாயக் கூடம், நூலகம், பூங்கா, நிலத்தடி நீர் தொட்டி போன்ற அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

ஒவ்வொன்றும் 3 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 278 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளன.

குடிசைகள் இல்லா நகரம்


முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமங்களிலுள்ள 1941 பயனாளிகள், சென்னை மாவட்டத்தைச் சார்ந்த 15 பகுதிகளிலுள்ள 1014 பயனாளிகள், கட்டமைப்பு விரிவாக்க திட்டத்தினால் பாதிக்கப்பட்ட 661 பயனாளிகள், என மொத்தம் 3616 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் இயற்கை சீற்றங்களிலிருந்து அவர்களை பாதுகாப்பதுடன், நான்கு வழி சாலை விரிவாக்க திட்டங்களுக்கு தேவையான இடத்தை பெறவும், குடிசைகள் இல்லா நகரமாக சென்னையை உருவாக்கிடவும் வழிவகை ஏற்படும்.

இந்த நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.