Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நிதிப் பற்றாக்குறையால் முடங்கும் நகராட்சி

Print PDF

தினமணி 18.09.2009

நிதிப் பற்றாக்குறையால் முடங்கும் நகராட்சி

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், செப். 17: ஊழியர்கள் மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக சிதம்பரம் நகராட்சியில் குப்பை அகற்றுதல், குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்குகள் பராமரித்தல் உள்ளிட்ட அடிப்படை பணிகளை சரிவர செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புகழ்பெற்ற நடராஜர் ஆலயமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் அமைந்துள்ள சிதம்பரம் நகரின் மக்கள்தொகை சுமார் 60 ஆயிரம். தினமும் 40 ஆயிரம் பேர் இங்கு வந்து செல்கின்றனர்.

இந் நகரில் 33 வார்டுகள் உள்ளன. சிதம்பரம் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்கள் 140-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். ஆனால் தற்போது 96 பேர் மட்டுமே உள்ளனர்.

அவ்வப்போது காலியாகும் பணியிடங்கள் நிரப்பப்படாததால் இந்த நிலை.

இதனால் நகரில் சேகரமாகும் குப்பைகளை அவ்வப்போது அகற்ற போதிய ஊழியர்கள் இல்லை.

இதுகுறித்து பாமக நகர்மன்ற உறுப்பினர் ஏ.ரமேஷ் கூறுகையில், ""ஆயிரம் பேருக்கு 4 துப்புரவுத் தொழிலாளர்கள் தேவை. இதன்படி சிதம்பரம் நகராட்சியில் 400 தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும். குறைந்தபட்சம் 200 பணியாளர்களாவது இருக்க வேண்டும்'' என்றார்.

பொறியாளர் பிரிவில் பொறியாளர், உதவிப்பொறியாளர், தொழில்நுட்ப அலுவலர் உள்பட 4 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

குழாய் பணியாளர் பணியிடம்-1, தலைமை நிலைய ஆய்வாளர் பணியிடம்-5, பிட்டர் பணியிடம்-1, வயர்மேன் பணியிடம்-1, எலக்ட்ரீஷியன் பணியிடம்-2 ஆகியவை காலியாக உள்ளன.

அலுவலகப் பிரிவில் இளநிலை உதவியாளர் பணியிடம்-4, வருவாய் உதவியாளர் பணியிடம்-5, தட்டச்சர் பணியிடம்-1, பதிவறை எழுத்தர் பணியிடம்-1 ஆகியவை காலியாக உள்ளன.

பொது சுகாதாரப் பிரிவில் துப்புரவுத் தொழிலாளர்கள் பணியிடம்-37, துப்புரவு மேற்பார்வையாளர் பணியிடம்-3, மகப்பேறு மருத்துவமனை உதவியாளர்கள் பணியிடம்-3, இரவுக் காவலர் பணியிடம்-1, அலுவலக உதவியாளர் பணியிடம்-2 ஆகியவை காலியாக உள்ளன.

குப்பை அள்ளும் லாரிகளுக்கு நிரந்தர ஓட்டுநர்கள் கிடையாது. தாற்காலிக ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டு லாரிகள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு சிதம்பரம் நகராட்சியில் மொத்தம் 68 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இவை நிரப்பப்படாததால் எந்தப் பணிகளையுமே சரிவர மேற்கொள்ள முடியாமல் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது.

நகராட்சியின் ஆணையர் ஜான்சன் கூறுகையில், ""நகராட்சியின் மாத வருமானத்தில் 49 சதவிகிதம்தான் ஊழியர்கள் சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என்று அரசாணை உள்ளது.

தற்போது நகராட்சியின் வருமானம் குறைந்து போனதால் மேற்கண்ட அரசாணைப்படி காலிப் பணியிடங்களை நிரப்ப இயலவில்லை'' என்றார்.

மூன்றரை கோடி வரிபாக்கி

சிதம்பரம் நகராட்சிக்கு சேரவேண்டிய சொத்துவரி குறித்த வழக்குகள் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இதனால் லாட்ஜ், திருமண மண்டபங்களின் சொத்து வரி பாக்கி ரூ. மூன்றரை கோடி நிலுவையில் உள்ளது.

ஆள் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் சிதம்பரம் நகராட்சி நிர்வாகத்தை சீரமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையாகும்.