தினமணி 30.08.2012
புதை சாக்கடை திட்டத்தில் இணைப்பு பெற அழைப்பு
பெரம்பலூர், ஆக. 29: பெரம்பலூர் நகரில் புதை சாக்கடை திட்டத்தில் இணைப்பு பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் போ. குருசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்தத் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடுவதற்காக நகராட்சி நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
பெரம்பலூரில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது கட்டடத்தின் பரப்பளவுக்கு உரிய வைப்புத் தொகையை நகராட்சிக்கு செலுத்துவதுடன், தங்களது கட்டடங்களில் உள்ள கழிவுநீரை குழாய்கள் மூலம் ஒருங்கிணைத்து, வீட்டில் ஆய்வுத் தொட்டியும், வணிக நிறுவனம், தொழில்சாலை உள்ளிட்ட இதர இணைப்புகளுக்கு தடுப்புச்சுவர் தொட்டியும் தங்களது சொந்த செலவில் அமைத்த பிறகு தெரிவித்தால், முன்னுரிமை அடிப்படையில் புதை சாக்கடை இணைப்பு வழங்கப்படும்.
500 சதுர அடிக்கு வீட்டு உபயோகத்துக்கு முன்தொகையாக ரூ. 3 ஆயிரமும், மாதம் ரூ. 75-ம், வணிக உபயோகத்துக்கு ரூ. 6 ஆயிரமும், மாதம் ரூ. 150-ம், 501-1200 சதுர அடிக்கு வீட்டு உபயோகத்துக்கு ரூ. 4 ஆயிரமும், மாதம் ரூ. 85-ம், வணிக உபயோகத்துக்கு ரூ. 12 ஆயிரமும், மாதம் ரூ. 255-ம், 1201- 2400 சதுர அடிக்கு வீட்டு உபயோகத்துக்கு ரூ. 5 ஆயிரமும், மாதம் ரூ. 100-ம், வணிக நிறுவனங்களுக்கு ரூ. 15 ஆயிரமும், மாதம் ரூ. 300-ம், 2401 சதுர அடிக்கு மேல் வீட்டு உபயோகத்துக்கு ரூ. 6 ஆயிரமும், மாதம் ரூ. 120-ம், வணிக இணைப்புக்கு ரூ. 15 ஆயிரமும், மாதம் ரூ. 600-ம் செலுத்த வேண்டும்.
சிறப்பு இனத்தில் முன்தொகை இல்லை.
வீட்டு உபயோகத்துக்கு ரூ. 140-ம், வணிக உபயோகத்துக்கு ரூ. 1400-ம் வசூலிக்கப்படும். மேலும், அனைத்து இணைப்புகளுக்கும் இணைப்பு கட்டணம் ரூ. 100 செலுத்த வேண்டும்.
பெரம்பலூர் நகரப் பொதுமக்கள் இணைப்பு கட்டணங்களை உடனே செலுத்தி, புதை சாக்கடை திட்டம் செயல்பட நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.