தினகரன் 14.08.2012
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்ற மேயர் உத்தரவு
கோவை, : மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்ற மேயர் உத்தரவிட்டார்.கோவை மாநகராட்சி 27வது வார்டுக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி பகுதியில் நேற்று சிறப்பு தூய்மை பணி நடந்தது. சாலையோரம் உள்ள புல் புதர்கள் அகற்றப்பட்டு, சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்பட்டன. இப்பணிகளை மேயர் செ.ம.வேலுசாமி நேரில் ஆய்வுசெய்தார். நேதாஜி நகரில் பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று, தொகுப்பு வீடுகளுக்கு அருகில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற உத்தரவிட்டார். அப்பகுதியில் மழைநீர் வடிகால் கட்ட மதிப்பீடு தயாரிக்கும்படி பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள சிறு பாலத்தை புனரமைக்கவும் கேட்டுக்கொண்டார்.
அஞ்சுகம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பங்கள் நடுரோட்டில் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார்செய்தனர். இதையடுத்து, மின்கம்பங்களை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வார்டு முழுவதும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை கணக்கெடுத்து, அவற்றை மின்வாரிய அதிகாரிகள் துணையுடன் அடுத்த ஒரு மாத காலத்துக்குள் முழுமையாக அகற்றிவிட்டு, வேறு இடத்தில் நடுவதற்கு உத்தரவிட்டார். அத்திப்பாளையம் பிரதான சாலையில் பொதுக்கழிப்பிடம் கட்டவும், சின்னவேடம்பட்டி பிரிவு அலுவலகத்தை சுற்றி சுற்றுச்சுவர், அங்குள்ள மயாத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கவும் உத்தரவிட்டார். அப்பகுதி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை மேயர் ஏற்றுக்கொண்டு, அதற்கான நடவடிக்கையை எடுக்க சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின்போது, துணை ஆணையாளர் சிவராசு, துணை மேயர் லீலாவதி, கவுன்சிலர் மாரிமுத்து உள்பட பலர் உடனிருந்தனர்.