தினகரன் 01.12.2010
விளம்பர நிறுவனத்துக்கு சலுகை பெங்களூர் மாநகராட்சிக்கு ரூ30கோடி இழப்பு
பெங்களூர், டிச. 1: சட்ட விதிமுறை மீறி தனியார் நிறுவனத்துக்கு விளம்பரம் செய்ய ஸ்கைவே பாலத்தில் அனுமதி வழங்கியுள்ளதால், மாநகராட்சிக்கு ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எம்.நாகராஜ் குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவரளித்த பேட்டி: விதானசவுதாவை சுற்றியுள்ள பகுதி ஏ பிரிவு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இப்பகுதியை ஒட்டியுள்ள கே.ஆர்.சாலை, பசவேஸ்வர சதுக்கம், ராஜ்பவன் சாலை, இன்பென்ட்ரி சாலை, அரண்மனை சாலை மற்றும் அதன் சுற்று பகுதியில் விளம்பரம் பலகை வைக்க அனுமதிக்ககூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தால் ஏ பிரிவு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள சோபியா பள்ளி அருகில் மாநகராட்சி அமைத்துள்ள ஸ்கைவே பாலத்தில் வாண்டேஜ் என்ற தனியார் நிறுவனம் விளம்பர பலகை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாண்டேஜ் நிறுவனம் சார்பில் ஏற்கனவே விளம்பரம் செய்ய ஜெயநகரில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்துவிட்டு சோபியா பள்ளி அருகில் விளம்பரம் செய்ய அமைச்சரின் சிபாரிசை ஏற்று மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. மிகக்குறைந்த கட்டணத்தில் வாடகை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு ரூ.30 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த அனுமதியை ரத்து செய்து முறைகேட்டில் தொடர்புள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சி பகுதியில் வளர்ச்சி திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக இதுவரை மேயருக்கு 283 கடிதம் எழுதியுள்ளேன். ஒருசில கடிதங்களுக்கு மட்டும் பதில் கொடுத்து முக்கிய பிரச்னைகள் தொடர்பான கடிதங்களுக்கு இன்னும் பதில் எழுதவில்லை. பொதுவாக மேயருக்கு எழுதும் கடிதத்திற்கு 7 நாட்களுக்குள் பதில் எழுத வேண்டும் என்பது விதிமுறை உள்ளது. இதை பின்பற்றவில்லை. எனவே வரும் வியாழகிழமை (நாளை) முதல்வர் மேயர் மற்றும் ஆணையர் எங்கு சென்றாலும், அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.