தினமணி 23.11.2010
ஏழைகளுக்கான வீட்டு வசதி திட்டம்: தில்லி அரசு முடிவு
புதுதில்லி, நவ.22- ஏழைகளுக்கு குறைந்த செலவில் வீடுகள் கட்டித் தருவதற்கான திட்டம் குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்றை தில்லி மாநில அரசு நியமித்துள்ளது.
முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நிதியமைச்சர் ஏ.கே. வாலியா, பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜ்குமார் செளஹான், சமூக நலத்துறை அமைச்சர் மங்கத் ராம் சிங்கல் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வீடு இல்லாதவர்களுக்கும் குடிசைகளில் வாழ்பவர்களுக்கும் குறைந்த செலவில் வீடுகள் கட்டித் தருவது குறித்து இந்த குழு விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில், தில்லியில் ஏழைகளுக்காக சுமார் 9000 வீடுகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கிழக்கு தில்லியில் 4 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், சுமார் 70 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மேற்கண்ட அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.