தினமலர் 20.11.2010
வீடுகளுக்கு வரி விதிக்காததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., தன்யா நகரில் வீடுகளுக்கு வரி விதிக்காததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவுன்சில் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ஸ்ரீவி., நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் சுந்தரி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் அழகர்சாமி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: சக்கையா: ஐந்து நாளுக்கொருமுறை தண்ணீர் வந்தும் 6, 7வது வார்டுகளில் குடிநீர் சரிவர சப்ளை இல்லை. துணை தலைவர்: கம்மாபட்டியில் ஒரு பகுதியில் கடந்த நான்காண்டுகளாக குடிநீர் வரவில்லை. பிரேமா: தெற்கு ரதவீதியில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாகிறது. வேதவள்ளி ராஜம்: துப்புரவு பணி சரிவர நடப்பதில்லை. மகேஷ்வரன்: தன்யா நகர் பகுதியில் 120க்கும் மேலாக புது வீடுகள் வந்தும் இது வரை பத்து வீடுகளுக்கு மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கமிஷனர் முத்துக்கண்ணு: டிச.31க்குள் அனைத்து வீடுகளுக்கும் வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடற்கரைசாமி: 20 சதவீதம் வீடுகளில் மின் மோட்டர் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.