Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மானிய வட்டியில் கடனுதவிவீடு கட்ட, வாங்க யோகம்

Print PDF

தினமலர் 18.10.2010

மானிய வட்டியில் கடனுதவிவீடு கட்ட, வாங்க யோகம்

ஊட்டி: நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற பகுதியில் வசிக்கும் நகர்ப்புற ஏழை மக்கள் வீடு கட்ட, வாங்க, மானிய வட்டியில் கடனுதவி வழங்கப்பட உள்ளது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வீடு கட்ட, வீடு வாங்க, மானிய வட்டியில் கடனுதவி வழங்கப்பட உள்ளது. திட்டத்தின் கீழ் கடன் பெற, நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற ஏழை மக்கள் விண்ணப்பிக்கலாம். நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் மாத வருமானம் 5,000 வரை, குறைந்த வருவாய் பிரிவினர் மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் வரை இருக்க வேண்டும்.நலிவுற்றப் பிரிவினருக்கு ஒரு லட்சம் ரூபாய், குறைந்த வருமானப் பிரிவினருக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்படும்; கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டு இடைவெளியில் திருப்பிச் செலுத்த வேண்டும்.கடன் தொகை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுத் தரப்படும். கடனுக்குரிய வட்டித்தொகையில் ஐந்து சதவீத மானியம் வழங்கப்படும்.

கூடுதலாக கடன் தொகை தேவைப்படுவோருக்கு, கூடுதல் தொகைக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும். நலிவுற்ற பிரிவினர் கட்டும் வீடு குறைந்தபட்சம் 25 .மீ., பரப்பு, குறைந்த வருமான பிரிவினர் கட்டும் வீடு குறைந்தபட்சம் 40 .மீ., இருக்க வேண்டும். சொந்த வீடு இல்லாதோர் மட்டும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.சொந்தமாக நிலம் வைத்திருப்போர், அதற்கான பட்டா உரிமை பெற்றிருக்க வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா பெற்றவர்களும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, கோவை, டாடாபாத்தில் உள்ள கோவை வீட்டு வசதிப்பிரிவு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற் பொறியாளரை தொடர்பு கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில், உரிய அலுவலரை அணுகி விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம்.இவ்வாறு, கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

Last Updated on Tuesday, 19 October 2010 05:56