மாலை மலர் 19.08.2009
சென்னையில் புதிதாக 100 ஏ.சி.பஸ்கள் மாநகர போக்குவரத்து கழகம் ஏற்பாடு
சென்னை, ஆக.19-
சென்னையில் முக்கிய பகுதிகளில் இயக்க 100 ஏ.சி.பஸ்களை மாநகர போக்குவரத்து கழகம் வாங்குகிறது. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பால்ராஜ் கூறியதாவது:-
சென்னையில் மாநகர ஏ.சி. பஸ்களுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து மேலும் 100 வால்வோ ஏ.சி. பஸ்கள் வாங்கப்பட உள்ளன.
ஐ.டி.நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள், கல்வி நிறுவனங்கள் நிறைந்துள்ள ராஜீவ்காந்தி எக்ஸ்பிரஸ் சாலை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் தேவைக் கேற்ப இந்த ஏ.சி.பஸ்கள் இயக்கப்படும்.
சென்னையில் பறக்கும் ரெயில் நிலையங்களுக்கு மேலும் பஸ் வசதியை அதிகரிப்பது குறித்து ரெயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது பூங்கா, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட 11 பறக்கும் ரெயில் நிலையங்களுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், கலங்கரைவிளக்கம் ஆகிய பறக்கும் ரெயில் நிலையங்களுக்கு மாநகர பஸ் சேவைகள் புதிதாக இயக்கப்படுகின்றன.
பயணிகள் வரத்துக்கு ஏற்ப இந்த பஸ் சேவைகள் அதிகரிக்கப்படும்.
கிழக்குகடற்கரை சாலையில் உள்ள முக்கிய இடங்களுடன் பறக்கும் ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் மாநகர பஸ் சேவைகளை போதிய அளவில் இயக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.