தினகரன் 09.09.2010
நகராட்சி காலி பணியிடங்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு உள்ளாட்சி பணியாளர்கள் கோரிக்கை
பொள்ளாச்சி, செப். 9: கோவை மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளர் விடுதலை முன்னணி சார்பில் நகராட்சியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளர் விடுதலை முன்னணியின் செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பொதுசெயலாளர் கேசவமுருகன் முன்னிலை வகித்தார். இதில் பொள் ளாச்சி நகராட்சி பணியாளர்கள் சிண்டிகேட் வங்கி மூலம் தாமதமாக ஊதியம் வழங்கப்படுவதை தவிர்க்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனத்தில் பின்பற்றப்படும் விதிமுறைகளில் நகராட்சி ஊழியர்களின் மொத்த வருவாய் 49 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நகராட்சி நிர்வாக ஆணையாளரின் சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடுப்பது, நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப (அனைத்து பிரிவுகளிலும்) தற்போது, பணியில் உள்ள ஊழியர்களில் தகுதியானவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் சங்கத்தின் துணைத் தலைவர்கள் மாரிமுத்து, தங்கவேல், செயலாளர் ராமன், பொருளாளர் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.