Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குளித்தலையில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்

Print PDF

தினமணி 14.08.2009

குளித்தலையில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்

குளித்தலை, ஆக.13: பள்ளி மாணவர்களுக்கான திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் குளித்தலை நகராட்சி மூலமாக குளித்தலையில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.

குளித்தலை பாரதி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற 2 நாள் முகாமுக்கு நகர்மன்றத் தலைவர் அ. அமுதவேல் தலைமை வகித்து பள்ளி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விளக்கினார்.

குளித்தலை நகராட்சியில் இத்திட்டத்தில் தற்போது 12 வார்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வார்டுகளில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து அவற்றிலிருந்து உரம் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பகுதிகளைச் சேர்ந்த சுய உதவிக்குழு பெண்களுக்கு அண்மையில் இதுகுறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்க முகாம்கள் நடைபெற்றன.

இதில், பாரதிவித்யாலயா பள்ளி, அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். ஆத்மா தொண்டு நிறுவனம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மூலம் திடக்கழிவு மேலாண்மை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அன்வர்பாட்ஷா, குளித்தலை நகராட்சி ஆணையர் கு. தனலட்சுமி, நகர்மன்ற உறுப்பினர் ஆர். ஜெயசங்கர், எக்ஸ்னோரா தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் பி. விஜய்ஆன்ந்த், வி. கணபதி, கே. மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர் மு. செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.