தினமலர் 19.08.2010
காஞ்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 10 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என நகராட்சி தலைவர் ராஜேந்திரன்தெரிவித்தார்.பாலாற்றில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் காஞ்சிபுரம் நகரில் பெரும்பாலான பகுதி மக்களுக்கு திருப்பாற்கடல் பகுதியிலிருந்து வரும் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நீர் சுவையற்றதாக உள்ளது.இந்நீரை சுத்திகரித்து வழங்க வேண்டும் அல்லது பாலாற்று குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரி வருகின்றனர். இது குறித்து நகராட்சி தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:திருப்பாற்கடல் தண்ணீரை சுத்திகரித்து வழங்குவதற்காக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 10 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் பணி துவக்கப்படும்.பஸ் நிலையத்தை தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் போதுமான அளவு இல்லை. எனவே குப்பைகளை அகற்றும் பணி குறிப்பிட்ட பகுதிகளில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அவர்கள் முறையாக பணிபுரியாததால் இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களை கண்காணித்து வருகிறோம். நகராட்சிக்கு தேவையான ஊழியர்களை நியமிக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்.இவ்வாறு ராஜேந்திரன் தெரிவித்தார்.