தினகரன் 13.08.2010
சவணூர் நகரில் துப்புரவு பணியாளருக்கு வீட்டுமனை
ஹாவேரி, ஆக. 13: மாவட்டத்தின் சவணூர் நகரில் வசிக்கும் பங்கி வகுப்பினருக்கு அரசின் சார்பில் மனைபட்டா வழங்கப்பட்டது. மாநில நீர்பாசனதுறை அமைச்சர் பசவராஜ் பொம்மை வழங்கினார்.
சவணூர் நகரசபையில் துப்புரவு தொழிலாளர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த பங்கி வகு ப்பினர் வசித்து வந்த குடிசை வீடுகளை அகற்றி விட்டு, அடுக்குமாடி கட்டிடம் எழுப்ப முடிவு செய்தனர்.
இதற்காக குடிசையை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பினர். இதை எதிர்த்து கடந்த மாதம் பங்கி வகுப்பை சேர்ந்த 5 பேர் மலத்தை உடலில் பூசி கொண்டு நகரசபை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு பங்கி வகுப்பினரின் கோரிக்கையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உள்பட பலர் குரல் கொடுத்தனர். இதை ஏற்று அரசின் சார்பில் வீட்டு மனைபட்டா வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அரசின் சார்பில் வாக்குறுதி கொடுத்தும் ஒருமாதம் கடந்தும் பட்டா வழங்காமல் புறகணித்தால், வரும் சுதந்திர தினத்தன்று விதான சவுதா எதிரில் மலம் பூசி போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதில் விழித்து கொண்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக பட்டா வழங்க முடிவு செய்தது. அதன்படி நேற்று மாலை சவணூர் தாலுகா தாசில்தார் பிரசாந்த் நால்வார் தலைமையில் மாநில நீர்ப்பாசன துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை வீட்டு மனைபட்டா வழங்கினார். சமூகத்தில் யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதம் கிடையாது.
அனைவரும் ஒன்று என்ற தத்துவத்தை அரசு கடைப்பிடித்து வருகிறது. சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பங்கி வகுப்பினருக்கு தேவையான சலுகைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.